தேமுதிக கைவிரித்த நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச குழு அமைத்தது திமுக!
சென்னை: தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசுவதற்கு, ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவை திமுக உருவாக்கியுள்ளது.
கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அன்பழகன் இதுகுறித்து கூறியதாவது: தொகுதி பங்கீடு பற்றி கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்பதற்காக, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆலந்தூர் பாரதி ஆகிய திமுக நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்தெல்லாம், சம்மந்தப்பட்ட கட்சிகளுடன் கூடி ஆலோசித்து இக்குழு முடிவெடுக்கும் என்று அன்பழகன் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில், காங்கிரஸ் மற்றும் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளும் மட்டுமே உள்ளன. தேமுதிக கைவிரித்துவிட்ட நிலையில், மேலும் பல சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்க்க திமுக முயன்றுவரும் நிலையில், தொகுதி பங்கீட்டையும் ஆரம்பித்துவிட்டது அக்கட்சி.
எனவே திமுக கூட்டணிக்கு புதிதாக பல கட்சிகள் சேருவது பாதிக்கப்படுமா, அல்லது அக்கட்சிகளுக்கு சிறிது தொகுதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.