ஜொலிக்கும் திமுக மாநாடுத்திடல்... குவியும் தொண்டர்கள்...
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் திமுகவின் 10-வது மாநில மாநாடு திருச்சியில் பிப்ரவரி 15ம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது.வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுகவின் பத்தாவது மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான திமுகவினரை மாநிலம் முழுவதுமிருந்து பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில் முதல்நாளான 15-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாநாட்டு முகப்பில், திமுக தலைவர் மு.கருணாநிதி கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் பெரியார், அண்ணா, பாரதிதாசன் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிற்பகல் மூன்று மணிக்கு இசை நிகழ்ச்சியும், நான்கு மணி முதல் பல்வேறு தலைப்புகளில் உரையும் நடக்கும். இரவு எட்டு மணிக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மாநாட்டு சிறப்புரையாற்றியதும், முதல் நாள் நிகழ்ச்சி முடிகிறது.
திருச்சி விழாக்கோலம்
திருச்சி மாநகரில் அனைத்து சாலைகளிலும் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொடி தோரணங்கள் கட்டப்பட்டும். அண்ணா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கட்-அவுட்களும் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாநகர் மற்றும் அனைத்து சாலைகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஜொலிக்கும் மாநாட்டு வளாகம்
தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்று மின் விளக்குகள் ஜொலிப்பதால் மாநாட்டு வளாகம் ஒரு குட்டி நகரம் போல காட்சி அளிக்கிறது.
சுற்றுலா தளமானது
மேடு, பள்ளமாக, புதர் மண்டி கிடந்த இடத்தில் ஒரு மாத காலத்தில் புதிய நகரையே உருவாக்கியதைப்போல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு திடலை பார்க்க திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். பெண்கள், குழந்தைகள் என குடும்பம், குடும்பமாக மாநாட்டு திடலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். காலை முதல் இரவு 11 மணி வரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குவியும் தொண்டர்கள்
இந்த நிலையில் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி திருச்சிக்கு வருவதால் மாநாட்டு வளாகத்தில் காலை முதலே திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான திமு.க. வினர் குவிந்த வண்ணம் உள்ளனர்.
காரில் சென்ற கருணாநிதி
திருச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.
வழியெங்கும் வரவேற்பு
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வரை முக்கிய இடங்களில் கருணாநிதிக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி எல்லையில்
திருச்சி மாவட்ட எல்கையான சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் இரவில் திருச்சி சங்கம் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த அவர் இன்று மாநாட்டு வளாகத்தை பார்வையிடுகிறார்.
250 ஏக்கரில் பிரம்மாண்டம்
தி.மு.க. 10-வது மாநில மாநாட்டுக்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அண்ணாநகரில் 250 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களாக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக பணியில் ஈடு பட்டு தற்போது பணி நிறைவு பெற்றுள்ளது.
நாடாளுமன்ற முகப்பு
இந்த மாநாட்டு பந்தலில் தலைவர்கள் அமர மாநாட்டு மேடை 200 அடி நீளம் 80 அடி அகலத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தின் முகப்பு தோற்றம் போல பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரியார், அண்ணா சிலைகள் இடம் பெற்றுள்ளன.
பாதுகாப்பான பந்தல்
தொண்டர்கள் அமருவதற்கான மாநாட்டு பந்தல் 1100 அடி நீளம் 600 அடி அகலத்தில் மழை பெய்தாலும் பாதிக்காத வகையில் தகர கூரை வேயப்பட்டு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வேலைப்பாடுகளுடன் கண்ணை கவரும் வகையில் பந்தல் உள் அலங்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சொகுசு குடில்கள்
மாநாட்டு மேடையின் பின்புறம் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஓய்வெடுக்க அனைத்து வசதிகளுடன் 7 சொகுசு அறைகள் மற்றும் கேண்டீன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரண்மனை நுழைவு வாயில்
மாநாட்டு பந்தலின் முகப்பு பகுதி பனை ஓலைகளால் வேயப்பட்டு அரண்மனை நுழைவு வாயில் போன்ற தோற்றத்துடனும், 2-வது முகப்பு நாடாளுமன்றத்தின் வடிவிலும், மாநாட்டு பந்தலின் நுழைவு வாயில் டெல்லி செங்கோட்டை வடிவிலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒளிவெள்ளத்தில் பந்தல்
மாநாட்டு பந்தலில் இரவை பகலாக்கும் விதத்தில் 12 ஆயிரம் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மாநாட்டு வளாகமே மின்னொளியில் ஜொலிக்கிறது. மாநாட்டு பந்தலிலும் தொண்டர்கள் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதியாக 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. டி.வி.க்கள் வைக்கப்படுகிறது.
மாநாடு துவக்கம்
இதன் அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 90 அடி உயரத்தில் கே.என். நேருவின் தம்பியான மறைந்த ராமஜெயத்தின் நினைவு கொடி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வருகிற 15-ந் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநதி கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
அன்பழகன் உரை
பெரியார், அண்ணா, பாரதிதாசன் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிற்பகல் மூன்று மணிக்கு இசை நிகழ்ச்சியும், நான்கு மணி முதல் பல்வேறு தலைப்புகளில் உரையும் நடக்கும். இரவு எட்டு மணிக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மாநாட்டு சிறப்புரையாற்றியதும், முதல் நாள் நிகழ்ச்சி முடிகிறது.
நாகூர் ஹனிபா கச்சேரி
திமுக மாநாடு நடைபெறும் இடங்களில் நாகூர் ஹனிபாவின் இசைக் கச்சேரி நடைபெறும். அவருக்கு தற்போது 90 வயதாவதால் இந்தமுறை திருச்சி மாநாட்டில் இரண்டாம் நாளன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு, நாகூர் இ.எம்.ஹனீபா மகன் நவ்ஷாத் அலி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
கனிமொழி-குஷ்பு
காலை 10 மணி முதல் பல்வேறு தலைப்புகளில் உரை நடக்கிறது. இதில் எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, செல்வகணபதி, வசந்தி ஸ்டான்லி, குஷ்பு, பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், திமுக நிர்வாகிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் உரையாற்றுகின்றனர்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
காலை 11 மணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்றன. இதைத் தொடர்ந்து கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆற்காடு நா.வீராசாமி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்புரையாற்று கின்றனர்.
கூட்டணித் தலைவர்கள்
முகப்பில் கூட்டணித் தலைவர்களின் கட்- அவுட் கள், போர்வீரர் சிலைகள், கருங்கல் பில்லர்கள் என பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில்...
மாநாட்டு பந்தலின் இரு கரைகளிலும் குறைந்த விலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் உணவருந்தும் வகையில் 78 கடைகள் மற்றும் புத்தக கடைகள், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளது.