1 கொடுத்தா ஜெயிப்பீங்க… 2 கொடுத்தா தோப்பீங்க… திருமாவை நோகடித்த திமுக சீனியர்
சென்னை: ஒருவழியாக ஒரு சீட்டோடு ஓகே சொல்லி விட்டன திமுக உடன் இணைந்துள்ள 4 கூட்டணி கட்சிகள்.
ஆளுக்கு ஒரு சீட் என்பதுதான் திமுக பொருளாளர் ஸ்டாலினின் முடிவு அதை கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் இருந்து நிறைவேற்றியும் விட்டார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது அதிகம் மனம் நொந்தது திருமாவளவன்தான் என்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக அறிவாலயத்தில் அப்படி என்னதான் நடந்தது? மேற்கொண்டு படியுங்களேன்
வி.சியுடன் இழுபறி
கூட்டணி பேச்சு வார்த்தையின் போது 5 தொகுதியை அசராமல் கேட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
இஷ்டத்துக்கு கேட்காதீங்க
அப்போது அங்கிருந்த திமுகவின் சீனியர் ஒருவர் இதென்ன வாங்கி விக்கிற பொருளா? இஷ்டத்துக்கு கேட்கறீங்க என்றாராம்.
கண் சிவந்த திருமா
அந்த நக்கச் பேச்சு திருமாவை கண் சிவக்க வைத்துள்ளது. ஆனாலும் விடாமல் அழுத்தம் கொடுத்த திருமா குறைந்த பட்சம் 3 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டுள்ளார்.
சீனியரின் கமெண்ட்
அப்போதும் அந்த சீனியர், ஒண்ணு வாங்கினா ஜெயிப்பீங்க. 2 கொடுத்தா தோப்பீங்க என் கமெண்ட் அடிக்கவே எழுந்தே விட்டாராம் திருமா.
மாற்றிக் கொள்ளாத திமுக
ஒரு சீட்தான் என்று உறுதியாக இருந்த கடைசி வரை அதிலிருந்து பின்வாங்காமல் தன்னுடைய நிலைப்பாட்டின் படி ஒரே ஒரு சீட்டைத்தான் அதுவும் சிதம்பரம் தொகுதியை மட்டுமே ஒதுக்கியது.
திருமாவிற்கு எதிரான நிலை
திருமாவை இந்த அளவிற்கு புறக்கணிக்க காரணம் திமுகவில் சிலர் திருமாவளவனுக்கு எதிரான நிலையில் இருப்பதுதானாம். வன்னியர்களின் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும் என்ற நெருக்கடியே ஒரு சீட் மட்டும் ஒதுக்க காரணமாகிவிட்டது என்கின்றனர்.
ஒரே சிட்டிங்கில் ஓகே
அதே சமயம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தான் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் ஒரே முறையிலேயே ஓகே சொல்லி விட்டாராம். பெயரளவிற்கு கூட கூடுதல் சீட் கேட்கவில்லையாம்.
மமகவும் சிக்கலில்லை
அதேபோல திமுக கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி மத்திய சென்னை, மயிலாடுதுறை தொகுதிகளை கேட்டதாம். காங்கிரஸ் வர வாய்ப்புள்ளது எனவே ஒரு தொகுதிக்கு ஓகே சொல்லுங்கள் என்றாராம் கருணாநிதி. அந்த டீலுக்கு மமக ஓகே சொல்லி விட்டதாம். ஆனாலும் மமக கட்சிக்குள் சிலருக்கு மனவருத்தம் என்கின்றனர்.
ஒற்றை சீட் கலாச்சாரம்
கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட் வழங்குவதாக திமுக சொன்னதாலேயே கூட்டணியை விட்டு வெளியேறியது மமக. இம்முறை வேறு வழியின்றி ஒப்புக்கொண்டது.
வேலூர்தான் வேண்டும்…
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் சிட்டிங் தொகுதியான வேலூரையும், மயிலாடுதுறை தொகுதியையும் கேட்டாராம். ஆனால் இரண்டையும் விடுத்து ராமநாதபுரம் தர திமுக முன் வந்தது. ஆனால் அதை ஏற்காமல் வேலூரை கேட்டுப்பெற்றார் காதர் மொய்தீன்.
துரைமுருகனுக்கு ஸ்டாலின் வைத்த செக்
தனது மகன் கதிர் ஆனந்துக்கு எப்படியாவது வேலூரில் சீட் வாங்கி விட வேண்டும் என்று துரைமுருகன் கடும் முயற்சி செய்தார். ஆனால் அதை கிடைக்க விடாமல் செய்தது ஸ்டாலின்தான் என்கின்றனர். காரணம் அழகிரி பிரச்சினையின் போது துரைமுருகனை சந்தித்து அழகிரி பேசியது என்கிறார்கள்.
பந்தயத்திற்கு ரெடி
எப்படியோ கூட்டணி கட்சிகளுக்கு ஒரே ஒரு சீட் மட்டுமே ஒதுக்கி தேர்தல் களத்திற்கு தயார் படுத்திவிட்டது திமுக. இந்த கூட்டணியில் இனி யார், யார் இணையப்போகிறார்கள் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.