திமுக விஐபி வேட்பாளர்கள்.. "பேராசிரியர்", ஆற்காடு இல்லையே!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி புதிய வரலாறு படைக்க திருவாரூரில் 2வது முறையாக தேர்தல் காண்கிறார். கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக களம் கண்டுள்ளார். ஆனால் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் எதிர்பார்த்த தொகுதிகளிலேயே போட்டியிடுகின்றனர். சிலர் தொகுதி மாறியுள்ளனர். சிலர் போட்டியிடவில்லை.
திமுகவின் முக்கிய வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும்.. ஒரு மின்னல் பார்வை!
கருணாநிதி
திருவாரூரில் 2வது முறையாக களம் காண்கிறார் கருணாநிதி. கடந்த 1962ம் ஆண்டு முதல் தொடர்ந்து (1984 தவிர) தேர்தல்களைச் சந்தித்து வருகிறார் கருணாநிதி. இது அவருக்கு 14வது தேர்தலாகும். திருவாரூரில் கடந்த 2011ல் முதல் முறையாக போட்டியிட்டார். தற்போது மீண்டும் நிற்கிறார். இத்தொகுதியில், திமுக 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
மு.க.ஸ்டாலின்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 2011 தேர்தலில் முதல் முறையாக இந்தத் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் நிற்கிறார். கடந்த தேர்தலுக்கு முன்பு வரை இவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர். கடந்த தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி நின்றார். தற்போது ஜேசிடி பிரபாகரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
துரைமுருகன்
முன்னாள் அமைச்சர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் சாதனையாளர். கட்த 1996ல் முதலில் இங்கு அவர் போட்டியிட்டார். அடுத்து 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார் துரைமுருகன். தற்போது இத்தொகுதியில் 5வது முறையாக களம் காண்கிறார். இங்கு இதுவரை நடந்த தேர்தல்களில் 7 முறை திமுகவும் (அதில் நான்கு முறை துரைமுருகன் வெற்றி), 3 முறை அதிமுகவும், சிபிஐ, காங்கிரஸ் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
பொன்முடி
திமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர் பொன்முடி. முன்னாள் அமைச்சரான இவர் தற்போது திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2011ல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டு முதல் தேர்தல் நடந்தது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கம், தேமுதிக வேட்பாளரான வெங்கடேசனிடம் தோல்வியுற்றார். இருப்பினும் பொன்முடியை திமுக தைரியமாக களம இறக்கியுள்ளது.
எஸ்.முத்துசாமி
முன்னாள் அதிமுக ஜாம்பவான்களில் ஒருவர் எஸ். முத்துச்சாமி. முன்னாள் அமைச்சர். தற்போது திமுகவில் உள்ளார். கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அத்தொகுதியில் முத்துச்சாமியை தோற்கடித்த தேமுதிகவின் சந்திரகுமாரே மீண்டும் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார். இதனால் ஈரோடு மேற்கில் போட்டியிடுகிறார் முத்துச்சாமி. கடந்த முறை அதிமுகவின் கே.வி. ராமலிஙகம் இங்கு வெற்றி பெற்றிருந்தார்.
கே.என்.நேரு
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கே.என்.நேரு. இத்தொகுதியில் இதுவரை திமுக, அதிமுக ஆகியவை தலா 6 முறை வென்றுள்ளன. 2 முறை கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2011 தேர்தலில் இங்கு மரியம் பிச்சை அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் மரணமடைந்ததால் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிமுகவின் மு.பரஞ்சோதி போட்டியிட்டு வென்றார்.
ஏ.வ.வேலு
ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான ஏ.வ. வேலு, கடந்த முறை போட்டியிட்ட அதே திருவண்ணாமலையில் இந்த முறையும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இதுவரை நடந்துள்ள 12 தேர்தல்களில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 5 முறை வெற்றி பெற்றுள்ளது.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன்
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார் மறைந்த பிடிஆர் பழனிவேல்ராஜனின் புதல்வர் தியாகராஜன். நியூயார்க் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், உலக முன்னணி நிறுவனங்களின் நிதி ஆலோசகர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து வந்த வரை அரசியலுக்கு கூட்டி வந்துள்ளது திமுக. இத்தொகுதியில் இதுவரை திமுக 5 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. தமாகா 2 முறையும், அதிமுக, சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கட்த தேர்தலில் இங்கு தேமுதிக சார்பில் சுந்தரராஜன் போட்டியிட்டு வென்றிருந்தார்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
அருப்புக்கோட்டை தொகுதி தமிழக வரலாற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்தத் தொகுதியில் கடந்த 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர் போட்டியிட்டு வென்று மாபெரும் மக்கள் பலத்துடன் முதல்வராக சட்டசபைக்குள் நுழைந்தார். இது அதிமுக கோட்டை. இங்கு 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும், ஒரு முறை பார்வர்ட் பிளாக் கட்சியும் வென்றுள்ளன.
தங்கம் தென்னரசு
முன்பு அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டவர் தங்கம் தென்னரசு. கடந்த 2006ல் இத்தொகுதியில் தங்கம் தென்னரசு வென்றிருந்தார். கடந்த 2011ல் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக ஆட்சியமைத்தால் அமைச்சர் பதவி உறுதி என்று கூறப்படும் சிலரில் இவரும் ஒருவர் ஆவார்.
அன்பழகன் இல்லை
இந்தத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய விஐபி மிஸ் ஆகியுள்ளார். அவர் பேராசிரியர் அன்பழகன். வயது காரணமாக அவர் போட்டியிடவில்லை. அதேபோல ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட மேலும் சில விஐபிக்களும் இ்ந்த முறை திமுக சார்பில் போட்டியிடவில்லை.