ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தி.மு.க.வுக்கு ஆதரவு தர மறுத்த காங்கிரஸ்- அதிர்ச்சியில் கருணாநிதி!!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காதது அக்கட்சித் தலைவர் கருணாநிதியை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் ஆளும் அண்ணா தி.மு.க., தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா ஆகிய 4 கட்சிகள் போட்டியிடுகின்றன.
ம.தி.மு.க, பா.ம.க.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க., இத்தேர்தலில் போட்டியும் இல்லை ஆதரவும் இல்லை என்று முதலில் அறிவித்தது. பாரதிய ஜனதா கூட்டணியில் ஊசலாட்டத்துடன் இருக்கும் பா.ம.க.வும், நாங்களும் போட்டியிடவில்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என்று அறிவித்தது.
கேப்டனின் கனத்த மவுனம்
பாரதிய ஜனதா கூட்டணியில் நீடிப்பதாக சொல்லுகிற தே.மு.தி.க.வின் திருச்சி மாவட்ட செயலாளர் பா.ஜ.க.வேட்பாளரை ஆதரிப்பதாக கூறினாலும் கட்சித் தலைவர் விஜயகாந்த் கனத்த மவுனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சி.பி.எம்.க்கு வி.சி. ஆதரவு?
இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் போட்டியும் இல்லை.. யாருக்கும் ஆதரவும் இல்லை.. என அறிவித்தது. தி.மு.க.வோ, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்தது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது மார்க்சிஸ்ட் கட்சியை ஆதரிக்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸுக்கு தி.மு.க. தூது
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுவிடுவதற்காக மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழியை காங்கிரஸிடம் தூது அனுப்பினார் கருணாநிதி. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுடன் தி.மு.க. நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிதம்பரம் லாபி
ஆனால் இளங்கோவனுக்கு எதிரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமோ, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கவே கூடாது என்று டெல்லி மேலிடத்தில் 'லாபி' செய்திருக்கிறாராம்... இந்த பஞ்சாயத்துக்கு பேசாமல் அமைதியாக இருங்கள் என்று மட்டும் காங்கிரஸ் மேலிடம் கட்டளை போட்டுவிட்டது.
கைவிரித்த காங்கிரஸ்
இதனைத் தொடர்ந்தே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், நாங்கள் போட்டியிடப் போவதும் இல்லை.. யாருக்கும் ஆதரவும் அளிக்கவில்லை" என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்திருக்கிறார். காங்கிரஸின் ஆதரவு இல்லை என்ற அறிவிப்பால் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.