'ஆன்மீக அரசியல்' ரஜினிக்கு பதிலடி தர ஈரோட்டில் மண்டல மாநாடு நடத்தும் திமுக!
ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி தர தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் மண்டல மாநாட்டை நடத்துகிறது திமுக.
சென்னை: திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மீக அரசியலை முன்வைத்துள்ள ரஜினிகாந்துக்கு அடுத்தடுத்து பதிலடி தருவதில் திமுக முனைப்பாக உள்ளது. தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பிரமாண்ட மண்டல மாநாட்டை நடத்துவதில் திமுக தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
30 ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். இன்னமும் தனிக்கட்சியின் பெயரை அறிவிக்காவிட்டாலும் தாம் முன்வைக்கப் போவது ஆன்மீக அரசியல் என கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
திமுக பதிலடி
திராவிடர் இயக்க அரசியல் மட்டுமே கொடிகட்டிப் பறக்கும் தமிழகத்தில் இந்துத்துவா அரசியலை காலூன்ற வைக்க ரஜினிகாந்த் மூலமாக பாஜக திட்டமிடுகிறது என்பது பொதுவான விமர்சனம். திமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்த போதே அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், ஆன்மீக அரசியலுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
மாநாட்டு ஏற்பாடுகள்
இந்நிலையில் ஈரோடு மாவட்ட மூத்த நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் ஈரோட்டில் பிரமாண்ட மண்டல மாநாடு அமைப்பது தொடர்பாக ஏற்பாடுகளை கவனிக்குமாறு திமுக தலைமை கூறியுள்ளதாம்.
பதிலடி தரும் மாநாடு
இம்மாநாட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது. முழுமையான ஒரு திராவிடர் இயக்க மாநாடாக, ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு சரியான பதிலடி தரும் மாநாடாக இது அமைய இருக்கிறதாம்.
தொண்டர்கள் உற்சாகம்
அதனால்தான் பெரியார் பிறந்த ஈரோட்டை திமுக தலைமை தேர்வு செய்திருக்கிறதாம். திமுகவின் இந்த விறுவிறு வியூகம் அக்கட்சி தொண்டர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.