ஐசியூ வார்டில் அரசு… குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் சிறையை நிரப்புவோம்: அதிரடி ஸ்டாலின்
சென்னை: குடிநீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சியும் ஐசியூ வார்டில் சேர்த்ததுபோல், கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த பிரச்சினையை கையில் எடுத்து போராடி வருகிறது எதிர்கட்சியான திமுக. கொளத்தூர் பகுதியில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்யாத தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர். பெண்கள் கூட்டத்தைப் பார்த்து உற்சாகமடைந்த ஸ்டாலின்,‘தமிழக அரசே, தமிழக அரசே தாகம் தீர்க்க தண்ணீர் தா' என்று முழக்கமிட்டார். இதனைக் கேட்ட பெண்களும் தமிழக அரசை எதிர்த்த கோஷமிட்டனர்.
தண்ணீருக்கான போராட்டம்
அதே உற்சாகத்தோடு பேசிய ஸ்டாலின், தண்ணீருக்காக நடத்தப்படும் மக்கள் போராட்டம் இது. மற்றவர்கள் நினைப்பது போல வரும் சட்டமன்ற தேர்தலுக்காக, அரசியலுக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல இது. போதை தரும் தண்ணீருக்காக நடத்தப்படும் போராட்டமும் அல்ல. மாறாக, மக்களின் தாகத்தை போக்க தண்ணீருக்காக நடத்தப்படும் போராட்டம் இது.
கடனில் தத்தளிக்கும் அரசு
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என திமுக தலைவர் கருணாநிதி மிகத்தெளிவாக கூறியுள்ளார். தமிழக அரசே தாகத்தை தீர்க்க தண்ணீர் தா என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.கடந்த 4 ஆண்டாக இந்த அரசு மிகப்பெரிய கடனில் தத்தளிக்கிறது.
ஐசியூ வார்டில் உள்ளது
மருத்துவமனையில் ஐசியூ வார்டு என்றால் ஆபத்தான நிலை என்று சொல்வார்கள். அதுபோல தான் இந்த ஆட்சியும் ஐசியூ வார்டில் சேர்த்ததுபோல், கவலைக்கிடமாக உள்ளது. திமுக ஆட்சியில் இருந்தபோது மாநகராட்சி சார்பில், பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட எல்லா துறைகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக சேர்த்து ஒரு குழு அமைத்தோம். அக்குழுவை அப்போதைய முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி தான் அமைத்தார்.
கலைத்த அதிமுக அரசு
இந்த குழு அமைக்கப்பட்டதால், பிரச்னை வரக்கூடிய நேரங்களில் அந்த குழுவை உடனடியாக கூட்டி ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்பட்டது. ஆனால் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த குழு கலைக்கப்பட்டது. இதனால் இன்றைக்கு சென்னையில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தற்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் சமீபத்தில், குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வற்றியதால் சென்னையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இலவச குடிநீர் என்ன ஆச்சு?
ஒரு அமைச்சரோ இவ்வாறு அலட்சியமாக கூறலாமா. கடந்த 2011 தேர்தல் அறிக்கை அதிமுகவினர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கு பாதுகாக்கப்பட்ட, சுத்தகரிக்கப்பட்ட தூய 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது நான் கேட்கிறேன், உங்கள் வீட்டிற்கு தண்ணீர் கொடுத்தார்களா?. மக்களே சிந்தித்து பாருங்கள்.
தண்ணீரை விற்கும் அரசு
இந்திய வரலாற்றிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மாநில அரசே தண்ணீரை விற்கும் அவலம் உள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்க்காவிட்டால் திமுக சார்பில் மிகப்பெரிய அளிவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
குடிநீர் தட்டுப்பாடு
சென்னையில் நாளுக்குநாள் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையின் பெரும்பாலானபகுதிகளில் கடந்த சில வாரமாக தண்ணீரே விடப்படவில்லை. சென்னையில் வாழும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் விடப்படும் தண்ணீரை தான் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் வாரியம் அலட்சியம்
தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏழைமக்கள் அதிக விலை கொடுத்து கேன் தன்ணீர் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. குடிநீர்வாரியம் மற்றும் தமிழக அரசின் அலட்சியம் காரணமாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வறண்டு போன ஏரிகள்
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து சென்னை நகருக்கு தண்ணீர் விடப்படுகிறது. மேற்கண்ட ஏரிகளில் மொத்த கொள்ளளவு 11 டி.எம்.சி. ஆனால் தற்போது அந்த ஏரிகளில் வெறும் 0.8 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. இதனால், சென்னை நகரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சினையை ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டமாக மாற்றியுள்ளது திமுக.