தமிழன் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும். திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி உருக்கமான பேச்சு
சென்னை : தமிழன் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், தாம் இருக்கும் வரை தி.மு.க., வலுப்பட பாடுபடுவேன் எனவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி முன்னிலையில் சென்னையில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் பொதுச்செயலர் அன்பழகன் பங்கேற்றார். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.
விழாவில் தி.மு.க. அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி நிதியாக ரூ.3.72 கோடி வழங்கப்பட்டது.
10-ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கமும், சான்றிதழையும் திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார். பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன.
தொடர்ந்து விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது...
தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் அண்ணா புகழ் இருக்கும். தானும், அன்பழகனும் இருக்கும் வரை திராவிடம் மற்றும் தி.மு.க., வலுப்பட பாடுபடுவோம்.
தமிழன் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும். திராவிடத்தை எடுத்துக்கூறும் கட்டுரைகளை படிக்க வேண்டும். தமிழர்களுக்கு என்றும் வீழ்ச்சியில்லை. திராவிடர்களால் உருவாக்கப்பட்ட வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும். திராவிடம் மேலும் வளர்ச்சி பெற தி.மு.க.,வினர் பாடுபட வேண்டும்.
நமது இனம், மொழி, இவற்றின் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். எந்த புயலையும் எதிர்க்கும் திறனும் வீரமும் திராவிட கட்சிகளுக்கு உண்டு. தமிழ் இனத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.,வை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.