திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பெரும் குழு....!
சென்னை: தேசிய கட்சிகளை அசத்தும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. இதை பெரிய குழு ஒன்று கூடித் தயாரித்துக் கொண்டுள்ளதாம்.
லோக்சபா தேர்தலி்ல போட்டியிடும் வேட்பாளர்களை அடையாளம் காண திமுக நேர்காணலை நடத்தி வருகிறது. 40 தொகுதிகளுக்குமே நேர்காணல் நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளில் திமுக தனது வேட்பாளர்களை அறிவிக்கும்.
அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு விட்டது. இந்த நிலையில் தி்முகவின் தேர்தல் அறிக்கையும் படு ஜரூராக தயாராகி வருகிறதாம்.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு , கனிமொழி, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், சற்குணபாண்டியன், முன்னாள் துணை வேந்தர் ராமசாமி உள்ளிட்டோரை கொண்ட குழு அமைக்கப்பட்டு அக் குழு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது.
சேமு சமுத்திர திட்டம், தமிழ் ஆட்சி மொழி, மதசார்பற்ற கொள்ளை, கச்சதீவு மீட்பு, மீனவர்கள் விவகாரம் , ஈழத் தமிழர் பிரச்சனை என தமிழ் மற்றும் தமிழர்கள் சார்ந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், இளைஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அந்த தேர்தல் அறிக்கை இருக்குமாம்.
இதுவரை இப்படி தேர்தல் அறிக்கையை யாரும் தயாரித்தில்லை என கூறும் அளவு இருக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளாராம். இதனால் திமுக தேர்தல் அறிக்கையை விறுவிறுப்புடன் கூடியதாக இருக்கும் வகையில் அதை தயாரித்து வருகிறார்களாம்.