வயக்காட்டு பொம்மை பேச்சுக்கு கண்டனம்: கறுப்பு பேட்ச் அணிந்து சட்டசபைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை : திமுக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் இன்று கண்டன பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வருகை தந்துள்ளனர். வயக்காட்டு பொம்மைகள் என நேற்று சட்டசபையில் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவினர் கண்டன பேட்ஜ் அணிந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சட்டசபையில் நேற்று, மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் துவங்கிய போது அதிமுக எம்.எல்.ஏ. முத்தையா, 89 வயக்காட்டு பொம்மைகளைக் கண்டு சிங்கங்கள் அஞ்சாது என்று கூறினார். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று நடந்த இந்த சம்பவத்திற்கும், சபாநாயகர் தனபாலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருப்பதாக திமுக., உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்துள்ளனர். நேற்று நடந்த விவகாரம் தொடர்பான பிரச்னையை இன்றும் அவையில் கிளப்ப திமுக வினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவையில் இன்றும் அமளியும், சலசலப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியாக அதிமுக இருக்குப் போதெல்லாம் அவ்வப்போது வெளிநடப்பு செய்யும் திமுகவினர் சில நேரங்களில் குண்டுக்கட்டாக வெளியேற்றப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்குக் கண்டனம் தெரிவித்து அவ்வப்போது சட்டசபைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்வார்கள் திமுக எம்.எல்.ஏக்கள்.