அனல் பறக்கும் சட்டசபை.. திமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா - தனது அறைக்கு செல்ல ஸ்டாலினுக்கு தடை!
சென்னை: சட்டசபை வளாகத்திற்குள் உள்ள எதிர்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல மு.க ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்களை பேரவை வளாகத்துக்குள் விட மறுத்து 4ம் எண் வாயில் கதவு மூடப்பட்டது. இதனைக் கண்டித்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபையில் நேற்று அதிமுக உறுப்பினர் குணசேகரன் நமக்கு நாமே பயணம் குறித்து பேசியதற்கு எதிராக திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
வெளியேற மறுத்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 80 பேரை குண்டுக்கட்டாக தூக்கி வந்து நேற்று வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஒருவாரத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
9 பேருக்கு அனுமதி
இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் 9 பேர் பங்கேற்கவில்லை. அதன்படி கருணாநிதி (திருவாரூர்) கே.என்.நேரு(திருச்சி மேற்கு), ஆர் காந்தி (ராணிப்பேட்டை), பூங்கோதை(ஆலங்குளம்), ஐ.பெரியசாமி(ஆத்தூர்), எம்-ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி), எம்.கே.மோகன்(அண்ணா நகர்) க.அன்பழகன்(கும்பகோணம்), ம.ராமச்சந்திரன்(ஒரந்தநாடு) உள்ளிட்ட 9 பேர் நேற்று அவைக்கு வரவில்லை.
8 திமுக எம்.எல்.ஏக்கள் அனுமதி
நேற்று அவைக்கு வராத இந்த 9பேருக்கு இடைக்கால நீக்க உத்தரவு பொருந்தாது. அவர்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கருணாநிதி தவிர பேர் இன்று சட்டசபைக்கு செல்ல முடிவெடுத்தனர்.
ஸ்டாலின் ஆலோசனை
முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு வந்தனர்.
திமுக எம்.எல்.ஏக்கள் குவிந்தனர்
சட்டசபையில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் 80 பேர் இன்று காலை சட்டசபை வளாகத்திற்கு வந்தனர். அவர்களுக்க அனுமதி மறுக்கப்பட்டதால், காலை 8.30 மணி முதல் சட்டசபை வளாக 4ம் எண் வாயில் முன் தர்ணாவில் ஈடுபட்டனர் இதனால் பதற்றம் ஏற்பட்டது.
போலீஸ் குவிப்பு
பதற்றம் ஏற்படலாம் என்ற காரணத்தால் சட்டசபை வளாகத்தில் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களை தங்கள் கட்சியின் அறைக்குச் செல்ல அனுமதிக்குமாறு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி மறுப்பு
அவை நடவடிக்கையில் ஈடுபடாமல் தங்களுக்கான அறைக்கு செல்ல அனுமதிக்குமாறும் கேட்டனர். காவலர்கள் மறுத்ததை அடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை வளாகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தரையில் அமர்ந்து தர்ணா
எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் பேரவை வளாகத்தில் உள்ள தனது அறைக்குச் செல்வதற்காக வந்தார். அப்போது அவரையும் உள்ளே விட அவைக்காவலர்கள் மறுத்தனர். எதிர்கட்சித் தலைவர் அறைக்குச் செல்ல தம்மை அனுமதிக்குமாறு காவலர்களுடன் ஸ்டாலின் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் பதற்றம் உருவானது.
பதற்றம் பரபரப்பு
இந்த தர்ணா போராட்டத்தால் சட்டசபை வளாகத்தில் பதட்டம் நிலவி வருகிறது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இடை நேக்கம் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏக்கள் கலந்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.