'எம்எல்ஏக்கள் விற்பனைக்கு'- சட்டசபையில் முழக்கமிட்ட திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்!
எம்எல்ஏக்கள் விற்பனைக்கு என்று முழக்கமிட்டு அமளி செய்த திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சென்னை: சட்டசபையில் கூச்சல் குழப்பம் செய்த திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் வெளியேற உத்தரவிட்டார். எம்எல்ஏக்கள் விற்பனைக்கு என்று கூறி திமுக எம்எல்எக்கள் பதாகை ஏந்தி வந்து முழக்கமிட்டதால் அமளி துமளி ஏற்பட்டது.
திமுக உறுப்பினர்கள் பெயரை குறிப்பிட்டு சபாநாயகர் தனபால் வெளியேற உத்தரவிட்டார். ஸ்டாலின், துரைமுருகன் என ஒவ்வொரு எம்எல்ஏக்களின் பெயராக குறிப்பிட்டு வெளியேற தனபால் உத்தரவிட்டார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
கேள்வி நேரம் தொடங்கியது எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனையடுத்து நேரமில்லாத நேரத்தில், முக்கிய பிரச்சினையை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் எழுப்பினார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் பணபேரம் குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச முற்பட்டார். அவர் கேள்வி எழுப்பவே சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
பணபேரம் குறித்து அவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். மேலும் பணம் பெற்றதாக கூறப்படுவதை சம்மந்தப்பட்ட எம்எல்ஏ மறுத்துள்ளதால் சபையில் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார்.
எம்எல்ஏ சரவணன் வீடியோ குறித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் மறுத்ததை தொடர்ந்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால் அமளி துமளி ஏற்பட்டது.
பணபேரம் குறித்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மறுத்துள்ளதால் விவாதிக்க தேவையில்லை என்று கூறியதை அடுத்தே அமளி துமளி ஏற்பட்டது. இதனையடுத்து குழப்பம் நீடிக்கவே அவை முடங்கியது. இதனையடுத்து எம்எல்ஏக்களை வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications