தங்க தமிழ்ச்செல்வனுடன் கைகுலுக்கி பேசிய திமுக எம்.எல்.ஏக்கள்.. சட்டசபை சுவாரஸ்யம்!
சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டவர்கள், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வனுடன் கைகுலுக்கி பேசினர். சட்டசபைக்கு வெளியே நடந்த இந்த நிகழ்வை பார்த்த அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட தருமத்துப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 3 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது வரை கட்டிடப்பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் கேள்வி நேரத்தின்போது இதனை துணைக் கேள்வியாக கேட்க முற்பட்டார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்காததால் அவர் வெளிநடப்புச் செய்தார்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வே அரசைக் கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தங்கதமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்வதாக கூறியபோது சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இந்நிலையில் சட்டசபையின் இன்றைய நிகழ்வுகள் முடிந்து அனைவரும் புறப்பட்டனர். அப்போது டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன், திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டவர்களை சந்தித்து கைக் கொடுத்து, நீங்க பேசியது தவறில்லையே என்று கூறினார். இதனை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அரசியலில் இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு சட்டசபைக்குவெளியே நடந்துள்ளது.