மதுவிலக்கு... அரசுக்கு எதிராக 56 இடங்களில் ஆர்ப்பாட்டம்- கொந்தளித்த திமுகவினர்
சென்னை: மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக திமுகவினர் நடத்திய ஆர்பாட்டம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித் படி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தெற்கில் ஸ்டாலின்
சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சோழிங்கநல்லூர் சிக்னல் பழைய மகாபலிபுரம் சாலை - கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் உள்ள கலைஞர் தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கிழக்கில் கனிமொழி
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கமிட்டார்.
திண்டுக்கல் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாநகராட்சி முன்பு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சந்திரம் எம்எல்ஏவுமான சக்கரபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர்.
கருணாநிதி நிறைவேற்றுவார்
கூட்டத்தில் பேசிய ஐ. பெரியசாமி, கலைஞர் ஆட்சிக்கு வந்தால் 7 கோடி மக்களுக்கும் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் 2006ல் கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றினார். இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, முதியோர் உதவி தொகை, பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்றவற்றை சொன்னதை செய்தார். அதேபோல் இதனையும் நிறைவேற்றுவார்.
சசிபெருமாள் நன்றி
தன் மீது உள்ள வழக்கில் விடுதலையாக வேண்டும் என்று மக்களைப் பற்றி ஜெயலலிதா சிந்திக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று கருணாநிதி அறிவித்தார். உடனே பூரண மதுவிலக்கு கோரி போராடி வந்த சசிபெருமாள் கலைஞரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் என்றார் ஐ.பெரியசாமி.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் எ.வ.வேலு, சிவானந்தம் தலைமையிலும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையிலும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் - நெல்லை
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையிலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை,தென்காசி உள்ளிட்ட இடங்களில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.