அதிமுகவுக்கு சற்றும் சளைக்காத திமுக... கருணாநிதி, ஸ்டாலினுக்காக குவிந்த விருப்ப மனுக்கள்!
சென்னை: தைப்பூச தினமான இன்று முதல் திமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்படுவது தொடங்கியுள்ளது. அதிமுகவில் எப்படி ஜெயலலிதாவுக்கு சீட் கேட்டு விருப்ப மனுக்கள் குவிகிறதோ அதேபோல திமுகவிலும் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு சீட் கேட்டு பலரும் மனுக்களைக் குவித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுகவில் விருப்ப மனுக்கள் பெறுவது ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த நிலையில் இன்று திமுகவிலும் விருப்ப மனுக்கள் பெறுவது தொடங்கியது.
234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைத் தரலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது. பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 25,000 கட்டணம் செலுத்தும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 15,000 கட்டியும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு இரு வகை தொகுதிகளுக்கும் கட்டணம் ரூ. 15,000தான். விண்ணப்ப படிவத்திற்குத் தனியாக ரூ. 1000 கட்ட வேண்டும்.
அண்ணா அறிவாலயத்தில்
அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது. பிப்ரவரி 10ம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றே பலரும் குவிந்து விட்டனர்.
கருணாநிதி - ஸ்டாலினுக்கு சீட் கேட்டு
இதில் பலரும் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தனர். ஆவடி தொகுதியில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போட்டியிட விரும்பி திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் மனு செய்தார்.
பி.கே.சேகர் பாபு
கொளத்தூர் தொகுதியில் கருணாநிதி, ஸ்டாலின் போட்டியிட விரும்பி சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு மனு செய்தார். துறைமுகம் தொகுதியில் கருணாநிதி போட்டியிட விரும்பியும் அவர் இன்னொரு மனு கொடுத்தார்.
கருணாநிதிக்காக
ஐ.சி.எப். முரளி, நாகராஜன் ஆகியோர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயரில் கொளத்தூர் தொகுதியில் விருப்ப மனு செய்தார். ஆயிரம்விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட மா.பா.அன்புதுரை என்பவர் மனு கொடுத்தார்.
சற்குணபாண்டியன்
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன் மனு செய்தார். சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போட்டியிட தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சேப்பாக்கம் வி.பி.மணி விருப்ப மனு கொடுத்தார்.
500க்கும் மேல்
இன்று மட்டும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்ததாக கூறப்படுகிறது. மனுக்களை பெறுவதற்காக அறிவாலயத்தின் பின்புறம் பந்தல் போடப்பட்டு சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன
அடுத்து பாமகவில்
அடுத்து பாமகவில் 27ம் தேதி முதல் விருப்ப மனுக்களைப் பெறவுள்ளனர். மற்ற கட்சிகள் யாருடன் கூட்டணி சேருவது மற்றும் பேரம் பேசுவது ஆகியவற்றில் பிசியாக இருப்பதால் விருப்ப மனுக்கள் குறித்து அக்கறை காட்டாமல் உள்ளனர்.