சட்டசபை விவாதங்களில் ஓங்கும் திமுக கை.. உடனுக்குடன் பதிலடி கொடுப்பதால் ஆளும் கட்சி மிரட்சி
சென்னை: சட்டசபையில் அதிமுகவுக்கு தக்க பதிலடி மூலம் தலைவலி உருவாக்கி வருகிறது திமுக. இந்த திடீர் எதிர் தாக்குதலால் முதல்வர் ஜெயலலிதா எரிச்சலடைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக அமைந்துள்ள தமிழக சட்டசபை கூட்டம், கடந்த 16ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, 17ம் தேதி, மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர், ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று தொடங்கியது. தொடக்கம் முதலே பல்வேறு விஷயங்களில் அதிமுக, திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
வெளிநடப்பு
வெளிநடப்பு கடந்த ஆட்சியில், திமுக 2வது பெரிய எதிர்க்கட்சியாகவே இருந்தது. இருப்பினும், கருணாநிதி குறித்து அதிமுக தரப்பு விமர்சனம் செய்யும்போதெல்லாம் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்து வந்தனர்.
வலுவான எதிர்க்கட்சி
ஆனால், இம்முறை திமுக 89 உறுப்பினர்களோடு தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. காங்கிரசோடு சேர்த்து 98 உறுப்பினர்களை அதிமுகவுக்கு எதிர் வரிசையில் வைத்து சவால்விடுக்கிறது திமுக.
வெளிநடப்பு இல்லை
முதல் நாள் சட்டசபை கூட்டத்தின்போது கச்சத்தீவு, இலங்கை போர் உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிமுகவினர் கருணாநிதியை வம்புக்கு இழுத்து விமர்சனம் செய்தபோதெல்லாம், அவைக்கு உள்ளேயே கடும் எதிர்ப்பை பதிவு செய்ததே தவிர வெளிநடப்பு செய்யவில்லை திமுக.
அனுபவசாலிகள்
மேலும், ஜெயலலிதாவுக்கு எதிராக பதில் வார்த்தை யுத்தம் நடத்தினார் ஸ்டாலின். துரைமுருகன், பொன்முடி போன்ற அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட ஜாம்பவான்களை பக்கத்தில் வைத்துள்ளதால் ஸ்டாலின் ஆக்ரோஷமாக வாதங்களை முன்வைத்தார்.
இன்னும் சீண்டல்
இந்நிலையில் 2வது நாளான இன்றும் கருணாநிதியை அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்டோர் சீண்டி பேசினர். இலங்கை தமிழர் பிரச்சினை இன்றும் வாத பொருளாக எடுக்கப்பட்டது. அப்போது திமுகவினர் பதிலுக்கு அதிமுக அரசை தாக்கி பேசினர். வெளிநடப்பு செய்ய எண்ணவில்லை.
ஓ.பி.எஸ் வேண்டுகோள்
ஒரு கட்டத்தில், இலங்கை பிரச்சினை பற்றி முழுமையாக விவாதிக்க தயாராக உள்ளது.. அதிமுக தயாரா என்று துரைமுருகன் சவால்விடுத்தார். விவாதத்தை விரும்பாத அமைச்சர் பன்னீர்செல்வம், அமளியில் ஈடுபட்டும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை.. என்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஜெயலலிதா அதிருப்தி
பன்னீர்செல்வம் கோரிக்கையை தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியோடு நடந்து கொள்ளுமாறு தனபால் அறிவுறுத்தினார். ஆனால் எல்லா பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் எதிரணியில் இருந்து பதிலடி வருவதை ஜெயலலிதா ரசிக்கவில்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
உறுத்தவில்லையா
வரலாறு காணாத பெரிய எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. இத்தனை பேரை எதிர்வரிசையில் பார்ப்பதற்கே ஜெயலலிதாவுக்கு அதிருப்தியாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. "எதிர்க்கட்சி வரிசையில் இத்தனை பேர் அமர்ந்துள்ளார்களே, இவர்களை தேர்தலில் வெற்றிபெற விட்ட உங்களுக்கு உறுத்தவில்லையா..?" என்று அதிமுக முக்கிய புள்ளிகளிடம் ஜெயலலிதா சமீபத்தில் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது கோபத்தை தூண்டும்வகையில் திமுகவின் பதிலடி உள்ளது.
ஓங்கிய கை
திமுகவில் உள்ள பல உறுப்பினர்கள் அனுபவம்மிக்கவர்கள். அரசுக்கு, பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் தரப்பில் ஒரு அளவுக்கு மேல் விவகாரங்களை பேச வேண்டுமானால் முதல்வர் அனுமதி தேவை என்று கூறப்படுகிறது. இதனால் வாதங்களில் திமுகவின் கையே ஓங்கியுள்ளது.