திமுகவில் ஸ்லீப்பர் செல்கள்... ஆபரேசனுக்கு தயராகும் ஸ்டாலின்- கிலியில் மூத்த தலைவர்கள்
ஸ்டாலின் ஆபரேசன் செய்ய தயாராகி வருகிறார். கட்சியில் இருந்து கொண்டே திமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை களையெடுக்க தயாராகி வருவதால் பலருக்கும் கிலி ஏற்பட்டுள்ளது.
சென்னை: கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளது திமுகவில் உள்ள முத்த தலைவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் ஓய்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருந்தாலும் அவரை செயல்படாத தலைவர் என்றே மு.க அழகிரி உட்பட பலரும் கூறி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்தது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டவர்களை கட்சியை விட்டு நீக்கினாலும், மாநிலம் முழுவதும் உள்ள ஸ்லீப்பர் செல்களை களையெடுக்கத் தயாராகி விட்டார் என்பதை ஸ்டாலினின் நேற்றைய அறிக்கை காட்டுகிறது.
அரசியல் பயணம்
கடந்த சட்டசபை தேர்தலின் போது நமக்கு நாமே பயணம் செய்து மக்களை சந்தித்த ஸ்டாலின் ஆட்சியில் முதல்வராக அமர முடியவில்லை. ஆனால் 89 இடங்களில் வென்று வலுவான எதிர்கட்சியாகவே அமர முடிந்தது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ரஜினி, கமலை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலையில் உள்ள ஸ்டாலின் தனது களஆய்வை கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தொடங்க உள்ளார்.
ஸ்டாலின் கள ஆய்வு
ஸ்டாலின் தனது அறிக்கையில், திமுகவின் ஜனநாயகப் பாதையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை அகற்றி, வழக்கம்போல விரைந்து பயணித்து, வெற்றி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, தடைக்கற்களின் அளவும் இயல்பும் என்ன, ஒவ்வொரு கட்டத்திலும் எந்த மாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பன போன்றவற்றைக் கலந்தாலோசித்து வடிவமைத்துக்கொள்வதற்காகவே கள ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவிற்கு உரம்
திமுகவை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், பிப்ரவரி 1ஆம் தேதி இந்தக் களஆய்வு தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள கள ஆய்வில், திமுகவின் ஆணிவேருக்கு முறையாக நீர்ப்பாய்ச்சி, உரமூட்டுவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆபரேசனுக்கு தயரான ஸ்டாலின்
நிர்வாகிகள் தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவோ, பேச்சு மூலமாகவோ தெரியப்படுத்தலாம் என்று கூறியுள்ள ஸ்டாலின், கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆளுக்கு ஒரு கருத்து
போராட்டக் களங்களிலும், தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக இந்தக் கள ஆய்வு அமையட்டும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுகவில் மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்படாத குறுநில மன்னர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கு மட்டுமே திமுகவில் பதவி கிடைக்கிறது. இது அடிமட்ட தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது. எனவேதான் கருத்துக்களை எழுதி போட சொல்லியுள்ளார்.
அடிமட்டத்தில் இருந்து ஆபரேசன்
சமீபத்தில் திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையும் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் திமுகவினர் கூறும் கருத்தும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை கட்டுப்படுத்தவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
சரியில்லையே
சமீபத்தில் பேசிய அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவில் பில்டிங், பேஸ்மெண்ட் சரியில்லை, ஆடிப்போயிருக்கிறது என்றார். அவர்தான் திமுகவில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்றார். இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஸ்டாலினிடையே எழுந்துள்ளது.
மூத்த தலைவர்கள் அதிர்ச்சி
ஸ்டாலினின் களபயண ஆய்வு பற்றி அறிந்த உடனேயே அதிர்ச்சியடைந்த மூத்த தலைவர்கள்,நேற்றைய அறிக்கையை பார்த்து ஆடிப்போய் இருக்கிறார்களாம். லோக்சபா தேர்தலுக்கு முன்பு திமுகவில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றே அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.