கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு திமுக முழு ஆதரவு: கருணாநிதி
சென்னை: கரும்பு உற்பத்தி அதிகம் என்பதால் சர்க்கரை இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும், கரும்பு விலையை உடனே நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக முழு மனதோடு ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டெல்லியில் டிசம்பர் 12-ஆம் தேதி கரும்பு விவசாயிகளின் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி அதிகம் என்பதால் சர்க்கரை இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும், கரும்பு விலையை உடனே நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் பேரணியில் ஈடுபடுகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக முழு மனதோடு ஆதரிக்கிறது.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடும் வெப்பத்துக்குப் பின் மழை பெய்யும்போது, உண்டாகும் வைரஸ் கிருமியால் கோமாரி நோய் கால்நடைகளைத் தாக்குகிறது. தண்ணீர், காற்று மூலம் பரவும் இந்த நோயின் தாக்கம் 10 நாள்களுக்குப் பிறகுதான் வெளியில் தெரியும்.
கோவை, ஈரோடு, நாமக்கல், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஏராளமான கால்நடைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு மடிந்துள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறந்துள்ளன. இது தொடர்பாக அரசின் கால்நடை துறை எடுத்த நடவடிக்கை என்ன? இனியேனும், கோமாரி நோய் பரவாமல் தடுக்க அரசு தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இறந்த கால்நடைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
மாணவர் வருகை குறைவு என்று காரணம் கூறி, ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவும், ஓராசிரியர் பள்ளிகளை அறவே மூடிவிடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பள்ளி மூடல் தொடர்பாக அரசாணை வெளியிட்டால் பெரும் எதிர்ப்பு வரும் என்பதால், அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, அரசு இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications