மீனவர்களுக்காக எப்போதும் பாடுபடுவதும் போராடுவதும் திமுக மட்டுமே: மு.க .ஸ்டாலின்
நாகப்பட்டினம்: தமிழக மீனவர்களுக்காக எப்போதும் பாடுபடுவதும் போராடுவதும் திமுக மட்டுமே என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயனை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட போது பேசியதாவது:
திமுக தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நல்ல திட்டங்களை கொண்டு வந்து அதன் மூலம் மக்கள் பல பயன்களை பெற்றுள்ளனர். கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசில் 100 நாள் வேலை திட்டத்தை நாகை மாவட்டத்திற்கு கொண்டு வந்து பலருக்கு வேலை கிடைக்க வழி செய்தோம்.
பாதாள சாக்கடை திட்டம்
நாகையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தோம். 50 கோடி மதிப்பீட்டில் நாகை மாவட்டத்தில் துறைமுகம் மேற்கொள்ளப்பட்டது. கிடப்பில் போட்டிருந்த தஞ்சாவூர், திருச்சி, நாகை மற்றும் நாகை வேளாங்கண்ணி ரயில் பாதை திட்டம் நிறைவடைந்தது திமுக ஆட்சியில்தான்.
110 ஜெயலலிதா..
இது போல் எண்ணற்ற திட்டங்களை செய்தவர் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதா வெறும் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை படித்துவிட்டு திட்டங்கள் செயலற்று கிடக்கிறது.
என்னாச்சு மழைநீர் சேகரிப்பு திட்டம்?
இந்தப் பகுதியில் 1560 கோடி மதிப்பீட்டில் மழை நீர் சேகரிப்பு திட்டம் கொண்டுவரப்படும் என அறிவித்தார். அறிவிப்பு அறிவிப்பாகவே தான் உள்ளது. எதுவும் நிறைவேறவில்லை.
மீனவருக்காக போராடுவது திமுக
அதுபோல் மீனவர் நலனுக்காக பாடுபட்டவர் கழகத்தின் தலைவர் கருணாநிதிதான். மீனவர் சமுதாயத்திற்காக எப்போதும் பாடுபடுவதும் தி.மு.க. கழகம். பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளோம்.
மீனவர் உண்ணாவிரதம்..
அண்மையில் கூட நாகை மாவட்டத்தில் மீனவர்களை விடுவிக்கக்கோரி அனைத்து சமுதாயத்தினரும், சேர்ந்த மக்களும் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அச்செய்தியை பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பார்த்த கருணாநிதி, நாடாளுமன்ற குழுதலைவர் டி.ஆர்.பாலுவை அழைத்து உடனடியாக டெல்லிக்கு அனுப்பி, பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்திக்க வைத்து கடிதம் கொடுத்து அனுப்பினார்.
அவர்களை சந்தித்த பிறகு அவர்கள் கூறிய செய்தியை நாகை மீனவ சமுதாய மக்களிடம் சென்று "நான் சொன்னேன் என்றுகூறி உண்ணாவிரதத்தை கைவிடச் சொல். அவர்களின் உயிர் எனக்கு மிக முக்கியம் என்று கூற வைத்த கலைஞர் அந்த உண்ணாவிரதத்தை கைவிட வைத்தவர்"
வானில் பறக்கும் ஜெயலலிதா
வானிலே பறக்கும் ஜெயலலிதாவுக்கு கீழே பாதுகாப்பு நிற்கும் காவல்துறையினர், சட்டம் - ஒழுங்கை சரியாக பேணி காத்திருந்தால் தமிழ்நாட்டில் இந்தளவு சட்டம் - ஒழுங்கு சீரழிந்திருக்காது.
என்னாச்சு மின்வெட்டு
விண்ணை மூட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே, மாதங்களில் மின்வெட்டே இருக்காது என்று சொன்ன ஜெயலலிதா, இப்போது மூன்று வருடமாகிறது அவர் மாற்றி சொல்லி விட்டார்போல மின்சாரமே இல்லை.
பேருந்து கட்டணத்தை உயர்த்தாத கருணாநிதி
அப்போது கருணாநிதி முதல்வராய் இருந்தபோது என்னைபோல பல அமைச்சர்கள் எடுத்துக்கூறியும் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பஸ் கட்டணம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி அல்ல; வெறும் காணொளி காட்சி.
செய்தது என்ன?
இங்கே நாகை மாவட்டத்திற்கு தலைவர் அவர்களின் சொந்த மாவட்டமாக அமைந்திருக்கும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை செய்திருக்கிறோம். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 8 கோடி மதிப்பில் அரசு கல்லூரி, சமத்துவபுரம் போன்றவை கழகத்தின் ஆட்சியில்தான் கட்டப்பட்டது.
உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியது. கலைஞாயிறு பகுதியில் தீயணைப்புத்துறைக்கு கட்டிடம் கட்டப்பட்டது. அரசு பொது மருத்துவமனை, அரசு கால்நடை மருத்துவமனை, நகராட்சி அலுவலகங்கள், கட்டித்தரப்பட்டது என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.