காங், இடதுசாரி.. நட்பு பாராட்டும் கருணாநிதியின் சிதம்பரம் உரையில் 'சிதம்பர ரகசியம்'?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிதம்பரம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நட்பு பாராட்டி பேசியிருக்கிறார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை ஆதரித்து நேற்று பேசியதாவது:
சோனியாவை பிரதமராக்க..
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் யாரும் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புபவர்கள் அல்ல. எனக்கு முன்னால் பேசிய சில தம்பிமார்கள் குறிப்பிட்டதைப் போல நாங்கள் பிரதமர்களை உருவாக்குவோமே தவிர, நாங்கள் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புபவர்கள் அல்ல.
அப்படி உருவாக்கப்பட்ட பிரதமர்கள் யார் யாரென்று நாட்டிற்கு நன்றாகத் தெரியும். அரசியலைப் புரிந்தவர்களுக்கு மிகத் தெளிவாகப் புரியும்.
சோனியா காந்தி அம்மையார் பிரதமராக வரவேண்டும் என்று நான் பாடுபட்டேன். அதை எனக்கு முன்னால் பேசியவர்கள் இங்கே சொன்னார்கள். அவர்கள் பிரதமராக வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் நாங்களும் பாடுபட்டபோது என்ன சொன்னார்கள், அந்த அம்மையார் இந்தியரே அல்ல. அவர்கள் இந்தியாவினுடைய பிரதமராக வர தகுதியற்றவர்கள் என்றார்கள்.
நான் அப்போது அவர்களுக்கு சொன்ன பதில், அவர் எப்படி இந்தியராக இல்லை என்று நீங்கள் சொல்ல முடியும். ராஜீவ் காந்தி இந்தியர்தானே! அவருடைய துணைவியார் சோனியா காந்தி அம்மையார் இந்தியர் என்ற முறையிலே காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக வரவும், கூடுமானால் இந்தியாவின் பிரதமராக வரவும் எல்லா வகையிலும் பொருத்தமானவர்தான் என்று அன்றைக்கு ஓங்கி அடித்துச் சொன்னது இந்தக் கருணாநிதிதான் என்பதை உங்களுக்கு எல்லாம் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
உயிர்நண்பர்கள் கம்யூனிஸ்டுகள்
நேற்று வரை தங்களோடு தோழமை கொண்டிருப்பதாகக் கூறிய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் காலை வாரி விட்டு விட்டார். இப்படி காலை வாரி விடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளினுடைய நிலைக்காக நான் பரிதாபப்படுவதாகச் சொல்ல மாட்டேன். அவர்கள் ஒரு காலத்திலே என்னுடைய உயிர் நண்பர்களாக விளங்கியவர்கள். நான் பல நேரங்களில் சொல்லியிருக்கின்றேன். என்னதான் எங்களுக்கு அபிப்பிராய பேதங்கள் வந்தாலும் இந்தக் கருணாநிதியைப் பொறுத்தவரையில் அவன் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் என்று நான் சொல்லியிருக்கின்றேன்.
அந்த கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திலே இன்று நேற்றல்ல நெடுங்காலமாக ஆழ்ந்து பற்றுக் கொண்டவன் என்ற முறையில் அவர்கள் தனியாக விடப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு நான் வருத்தமடைகிறேன். அனுதாபப்படுகிறேன். அடுத்து வருகின்ற தேர்தல்களில் அவர்கள் எங்களை விட்டுப் போகாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கை இந்த அணியிலே இருக்கின்ற அத்தனை பேரும் சேர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றித் தருவோம் என்பதை நான் அவர்களுக்கு இந்த மேடையிலே அத்தனை தோழர்களின் சார்பாக நான் உறுதியளிக்கின்றேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.