திமுகவின் கத்திக்குத்து காஞ்சனாக்கள்: அமுதவள்ளி, அமுதாவின் பின்னணி
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வன்முறைகள் எதுவும் நிகழாத வகையில் பாதுகாப்பிற்காக பத்து கம்பெனி துணை ராணுவப்படையை வரவழைத்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக தகராறுகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.
சேலை கொடுப்பதை தடுத்த அதிமுக தொண்டரை கத்தியால் குத்தி பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு பெண்களும் திமுகவின் மகளிரணி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
உச்சக்கட்டமாக நேற்று மாலை இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் அ.தி.மு.க.வினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் இருந்தனர். அப்போது மூலத்தோப்பு பகுதியில் தி.மு.க. மகளிர் அணியினர் வீடு, வீடாக வேட்டி-சேலை வழங்குவதாக அவர்களுக்கு தகவல் வந்தது.

தடுத்த அதிமுகவினர்
இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் திரண்டு சென்று வேட்டி, சேலை வழங்கிய தி.மு.க.வினரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மோதல் ஆனது.

கத்தியால் குத்திய திமுகவினர்
இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கண்ணதாசன், அஞ்சம்மாள், மணிகண்டன் ஆகியோரை தி.மு.க.வை சேர்ந்த 2 பெண்கள் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் காயமடைந்தனர். கண்ணதாசனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

திமுக மகளிர் அணித்தலைவி
தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விரைந்து சென்று அ.தி.மு.க.வினரை கத்தியால் குத்திய 2 பெண்களை பிடித்து கைது செய்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி தலைவி அமுதவள்ளி, மற்றொருவர் தொண்டர் அணி அமைப்பாளர் அமுதா என தெரிந்தது. காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலைகள் ஒப்படைப்பு
மோதலின் போது தி.மு.க.வினர் போட்டுவிட்டுச் சென்ற சேலைகளை அ.தி.மு.க.வினர் கைப்பற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வம்பிழுக்கும் தொண்டர்கள்
வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறினார். இன்னும் சிலர் தொகுதியிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அதற்கு அடித்தளம் போடும் வகையில் சின்னச் சின்ன தகராறுகளை அரங்கேற்றி வருகின்றனர் தொண்டர்கள்.

ஆயத்த நிலையில் தேர்தல் அதிகாரிகள்
ஆனால் இதற்கெல்லாம் அசராத தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை செய்து வருகின்றனர். நாளைக்கு தேர்தல் அமைதியாக நடக்க வேண்டுமே என்று அந்த ரங்கநாதரை வேண்டிக்கொண்டுள்ளனர் ஸ்ரீரங்கம் தொகுதிவாசிகள்.












Click it and Unblock the Notifications