தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: அரசு நடவடிக்கை எடுக்க திமுக கோரிக்கை!
சென்னை: மத்திய உளவுத்துறை முன்கூட்டியே மாநில அரசுக்கு தகவல் கொடுத்து எச்சரித்திருந்தும், வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு தடுக்கத் தவறிய ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசுக்கு திமுக இளைஞர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அமைப்பாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க இளைஞர் அணி மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது.
தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், ஈஜி.சுகவனம், ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், அசன்முகமது ஜின்னா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்த ரயில் வெடிகுண்டு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததுடன் பலரையும் படுகாயப்படுத்தி, தலைநகரமான சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய உளவுத்துறை முன்கூட்டியே மாநில அரசுக்கு தகவல் கொடுத்து எச்சரித்திருந்தும், வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு தடுக்கத் தவறிய ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசுக்கு கடும் கண்டனத்தை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
மின்தடையால் தொழில்துறை, விவசாயம், வணிகம் ஆகிய அனைத்துத் துறைகளையும் முடக்கிப் போட்டுள்ளதற்கு இக்கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வழங்கி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 25 சதவீத மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் எந்த தொய்வும் ஏற்பட்டு விடாதபடியும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும் தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள அனுமதியளித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை இக்கூட்டம் வரவேற்று மகிழ்கிறது. தென்தமிழக விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை அரசியலாக்கும் ஜெயலலிதாவின் போக்கைக் கண்டித்து, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.
தமிழக இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டியை உரிய நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications