ஊசி போடுவதாக நடித்து கர்ப்பிணியிடம் 9 பவுன் நகைகளைத் திருடிய போலி டாக்டர்
திருப்பூர்: திருப்பூரில், கர்ப்பிணிப் பெண்ணிடம் ஊசி போடுவதாக ஏமாற்றி நகையை கொள்ளையடித்த போலி டாக்டரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், வி.வேலூர் அருகே உள்ள செல்வநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியரான ஜெகதீஷின் மனைவி பூங்கொடி. தற்போது நிறைமாத கர்ப்பிணியான பூங்கொடியை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தனர் அவரது குடும்பத்தினர்..
நேற்று முன்தினம் இரவு, பூங்கொடியை பரிசோதனை செய்யப் போவதாகக் கூறிக் கொண்டு, டாக்டர் உடையுடன் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். பூங்கொடிக்கு ஊசி போடப் போவதாகக் கூறி, அவரது சகோதரர் பழனிச்சாமியை அறையை விட்டு வெளியே போகச் சொல்லியுள்ளார் அந்த டாக்டர்.
அத்தோடு, கழுத்தில் ஊசிபோட வேண்டும் எனக்கூறி, ஏழு பவுன் தாலிச் சங்கிலி, இரண்டு பவுன் வளையல்களை கழற்றி வாங்கி கீழே வைத்துவிடுமாறு பூங்கொடியுடன் கூறியுள்ளார் அந்த மர்மநபர்.
அவரது பேச்சைக் கேட்டு, அனைத்து நகைகளையும் கழற்றி வைத்த பூங்கொடி, ஊசி போடுவார் என நம்பி திரும்பி படுத்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் ஊசி போடப் படாததால், சந்தேகமடைந்த பூங்கொடி திரும்பி பார்த்து அதிர்ந்துள்ளார்.
காரணம் அறையில் டாக்டரும் இல்லை, பூங்கொடியின் நகைகளும் இல்லை. பூங்கொடியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது அண்ணன் பழனிச்சாமி, நகைகளுடன் மாயமான போலி டாக்டரை மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், குற்றவாளி பிடிபடவில்லை.
தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், விரைவில் நகைகளை திருடிய போலி டாக்டர் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.