முதல்வர் ஜெயலலிதாவிற்கு நான்கு நாட்கள் ஓய்வு தேவை - மருத்துவர்கள் அறிவுரை
சென்னை: முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்தாலும், அவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்து விடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளதால் அவர் சில தினங்கள் கழித்தே வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு முழுமையாக குணமடைந்து விட்டதால், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்கள் இன்று மாலை முடிவு செய்வார்கள் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு வியாழக்கிழமை இரவு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
காய்ச்சல் நீர்ச்சத்து குறைபாடு
மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தனியான டாக்டர் குழு அமைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று பிற்பகலில் அவருக்கு காய்ச்சல் குணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
குணமான காய்ச்சல்
மூன்றாவது நாளான இன்று காலையிலும் அவருக்கு சிறப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் அவர் முழுமையாக குணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்தாலும், அவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்து விடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெயலலிதாவிற்கு உதவியாக மருத்துவமனையில் சசிகலா, இளவரசி தங்கியுள்ளனர்.
வழக்கமான உணவு
முதல்வர ஜெயலலிதா உடல் நலம் குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவர் வழக்கம் போல் உணவுகளை எடுத்துக் கொள்கிறார் என கூறியுள்ளார்.
அதிகாரிகள் வருகை
தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், செயலாளர்கள் சாந்தா ஷீலா நாயர், சிவ்தாஸ் மீனா, வெங்கட்ராமன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்கள் மருத்துவர்களுடன் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
அமைச்சர்கள் வருகை
இன்றும் மருத்துவமனை முன்பாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலைராஜன், வெற்றிவேல், பாலகங்கா ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் குவிந்தனர். மருத்துவமனைக்குள் வரும் வாகனங்கள் கிரீம்ஸ் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. நோயாளிகளுக்கு மட்டும் பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன.
காவல்துறையினர் பாதுகாப்பு
காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கடந்த 2 நாட்களாக மருத்துவமனையிலேயே முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார். மருத்துவமனை முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை போல இன்று தொண்டர்கள் மருத்துவமனை முன்பு திரளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரிம்ஸ் சாலையில் வாகனப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
4 நாட்கள் ஓய்வு
மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில தினங்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அஷ்டமி, நவமி முடிந்து நல்ல நாள் பார்த்து முதல்வர் வீடு திரும்பும் வரை கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை அதிமுகவினர் தொடர்ந்து செய்து வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.