தமிழக உளவுத்துறை அதிகாரிகளை வளைத்துப் போட்ட அமைச்சர்கள்
சென்னை: தமிழக உளவுத் துறையில் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை தங்கள் பகுதியில் அமைச்சர்கள் சிலர் பதவியில் அமர வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக காவல்துறையில் உளவுத்துறை என்ற பிரிவு செயல்படுகின்றது. இந்த பிரிவு அரசியல், குற்றம் மற்றும் பல்வேறு முக்கிய தகவல்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றது.
இதனால் இதன் உயர் பதவியான எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி., ஏ.டி.ஜி.பி. போன்ற பதவிகளுக்கு கடும் கிராக்கி ஏற்படும். எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அந்த கட்சி சார்பில் ஆளும் கட்சிக்கு விசுவாசமாக உள்ள அதிகாரிகளையே நியமிப்பது வழக்கம். முன்பு மாவட்ட தலைநகரங்களில் டி.எஸ்.பி. தலைமையில் இயங்கி வந்த உளவுத்துறை பின்பு இன்ஸ்பெக்டர் தலைமையில் இயங்கி வருகின்றது.
அந்தந்த மாவட்டத்தில் நடைபெரும் அரசியல் நிகழ்வுகள், குளறுபடிகள், அரசின் திட்டங்கள், காவல்துறை நடவடிக்கைகள், ஆளும் கட்சி நிர்வாகிகள் நடவடிக்கைகள் போன்றவைகளை அந்தந்த மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கண்காணித்து அதை சென்னையில் உள்ள அதன் தலைமையகத்திற்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாகும்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஏற்பட்ட உடன் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி நிர்வாகிகளின்செயல்பாடுகள் என பல முக்கிய தகவல்களை உளவுத்துறை மட்டுமே முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்த தகவல்களின் அடிப்படையிலேயே ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வந்தார்.
மேலும், முன்பு உளவுத் துறை என்றாலே வருமானம் இல்லாத கவுரப்பதவியாக தான் பார்க்கப்பட்டது. தற்போது அமைச்சர்களையே மாற்றும் அளவு சக்தி கொண்டது என்பதால் இந்த பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களது மேல் நடவடிக்கை வராமல் இருக்கவும், தங்களது அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்களாக தங்களுக்கு விசுவாசமானவர்களை சில அமைச்சர்கள் கொண்டு வந்து விட்டார்களாம். இதனால் பல அமைச்சர்களின் தவறுகள் மாவட்டத்திலேயே முடக்கப்பட்டு விடுகின்றதாம்.
தற்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் வெகுண்டு அதிமுக அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீது காட்டும் எதிர்ப்பை கூட தலைமைக்கு முறையாக கொண்டு செல்வதில்லையாம். பல முக்கிய சம்பவங்களை எல்லாம் மறைத்துவிட்டு ஒப்புக்கு சில சம்பவங்களை மட்டுமே கொண்டு செல்கின்றார்களாம்.
தங்களுக்கு எந்த இன்ஸ்பெக்டர் விசுவாகமாக இருப்பாரோ அவர்களுக்கு, தங்களது மாவட்ட இன்ஸ்பெக்டராக போலீஸ் நிர்வாக பிரிவில் கவனிக்க வேண்டியவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து பதவிகளை வாங்கி கொடுத்துவிடுகின்றார்களாம்.
ஆக தமிழக உளவுத்துறையை கண்காணிக்க முதல்வர் ஜெயலலிதா ஒரு உளவுத்துறையை நியமித்தால் தான் நேர்மையான தகவல்கள் கிடைக்கும் என காவல்துறை வட்டாரத்தில் இருந்து குரல்கள் கேட்கின்றது.