பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள் மக்களே: சரத்குமார் வேண்டுகோள்
நெல்லை: இனிவரும் தேர்தல்களில் யாரும் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் குடிக்காதீர்கள் என்கிறார்கள். மதுக்கடைகள் இருக்கிறது என்பதற்காக நீங்கள் ஏன் அங்கு செல்கிறீர்கள்? இந்தியாவில் சமத்துவ மக்கள் கட்சி இளையவர்கள் நிறைந்த கட்சியாக மாற வேண்டும். இளையவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு அதனை காப்பாற்ற வேண்டும். இனிவரும் தேர்தல்களில் யாரும் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள்.
அப்படி பணம் வாங்கி வாக்களித்தால் நாடு சீரழிந்துவிடும், நாடு உயர வேண்டும் என்றால் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிப்பதை ஒழிக்க வேண்டும். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதற்கு பின் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் யாருடன் கூட்டணி இருந்தாலும் நீங்களும் போட்டியிடுங்கள்.
இந்த கட்சி குடும்ப கட்சியல்ல. இது உங்களுடைய கட்சி. நீங்கள் தான் இந்த கட்சியை வழி நடத்திட வேண்டும். இன்னும் 10 நாட்களில் "எங்கள் பார்வையில் தமிழகம்" என்ற ஒரு முன்னோடி வழிகாட்டி செயல்விளக்க குறிப்புகள் அடங்கிய அறிக்கையை வெளியிட உள்ளோம் என்றார்.
ஜம்புநதி கால்வாய் திட்டத்திற்கு 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கன்னடியன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நெல்லை தென்காசி நான்கு வழி சாலை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும், பீடித் தொளிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 3500 ரூபாயாக உயர்த்திட வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள விதவை-முதியவர் ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.