கடைகளை மூடக் கட்டாயப்படுத்தக் கூடாது.. வெள்ளையன் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் இன்று சிலர் அறிவித்துள்ள கடையடைப்புப் போராட்டத்தின்போது கடைகளை மூட வேண்டும் என்று யாரும் கட்டாய்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவரான த. வெள்ளையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து நிலவிய பதட்டமான சூழலை, தமிழக காவல் துறை கட்டுப்படுத்தியதற்கு எமது பேரவை நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கடை அடைப்பு என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கும் எமது பேரவைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது வணிகர் பேரவை அரசியல் சார்பற்றது, எனினும் எல்லா கட்சிக்காரர்களும் வணிகர்களாக உள்ளனர். சில பகுதிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வணிகர்கள் அவர்களாகவே தங்கள் கடைகளை அடைத்துள்ளனர். என்றாலும் எமது பேரவை இந்த விஷயத்தில் நடுநிலையே வகிக்கின்றது. தங்கள் தலைமையின் மீது அ.தி.மு.க. தொண்டர்கள் வைத்திருக்கிற விசுவாசத்தை, எமது பேரவை பாராட்டுகிறது.
அதே நேரத்தில், தற்போது ஆயுதபூஜை, தீபாவளி, என்று பண்டிகைக் காலம் என்பதால் கடையடைப்புச் செய்யும்படி வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் அ.தி.மு.க. தொண்டர்களை எமது பேரவை கேட்டுக் கொள்கிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, எல்லா துறையிலும் அந்நியர் ஆதிக்கம் என்று ஏற்பட்டு வருவதற்கு காரணம் உலக வர்த்தக ஒப்பந்தம் தான். இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அண்ணல் காந்தி பிறந்தநாளில் (அக்-2) காலை 9 மணி முதல் 10 மணி வரை தமிழகம் எங்கும் மக்களிடையே பிரசார இயக்கம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.