கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டாதீர்... நடிகர் விஷால் வேண்டுகோள்
கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டி விட வேண்டாம் என்று நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமாவுக்கு மணி மண்டபம் கட்டி விட வேண்டாம் என்றும் கேளிக்கை வரியை செலுத்த இயலாது என்றும் நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் கூறுகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான அடுத்த தேர்தல் 2018 செப்டம்பரில் நடைபெறும்.
10% கேளிக்கை வரி தமிழகத்தில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது விதித்துள்ள 40 சதவீத கேளிக்கை வரியை எங்களால் செலுத்த முடியாது. 40 சதவீதம் வரியானது அரசே எடுத்துக் கொள்ளும். அத்தகைய சதவீதம் தயாரிப்பாளருக்கே கிடைக்காத நிலை உள்ளது.
கேளிக்கை வரி மூலம் தமிழ் சினிமா துறைக்கு மணி மண்டபம் கட்டாதீர். சிவாஜி சிலையில் கருணநிதியின் பெயரை இடம்பெற செய்ய வேண்டும். மலேசியாவில் ஜனவரியில் நடிகர், நடிகைகள் கலைநிகழ்ச்சி நிகழ்த்தப்படும். கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி முதல்வரை வரும் செவ்வாயன்று நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர் என்றார் அவர்.