உயிர்த் தியாகம் செய்வதால் ஒரு பயனும் ஏற்படாது.. விக்னேஷ் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் #vignesh
சென்னை: காவிரியில் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவது உண்மை. அதை சட்டப் போராட்டத்தாலும், அறப்போராட்டத்தாலும், அரசியல் அழுத்தம் கொடுப்பதாலும் தான் முறியடிக்க வேண்டும். மாறாக உயிர்த்தியாகம் செய்வதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது. இதை உணர்ந்து தீக்குளிப்பது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது. விக்னேசின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான கலவரத்தையும் கண்டித்து சென்னையில் தீக்குளித்த விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவம் பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வீர வணக்கங்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி பிரச்சினையிலும், இனம், மதம், மொழி, கல்வி சார்ந்த பிற பிரச்சினைகளிலும் விக்னேசுக்கு இருந்த கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவரது கோபம் மிகவும் நியாயமானது. தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அதே கோபம் உள்ளது. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழி ஏற்றுக் கொள்ள முடியாதது.
விக்னேஷின் குடும்பம் ஏழ்மையில் வாடும் குடும்பம். தங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு விக்னேஷைத் தான் அவரது குடும்பத்தினர் நம்பியிருந்தனர். அந்தக் கடமையை நிறைவேற்றாமல் விக்னேஷ் தீக்குளித்ததால் அவரது குடும்பம் பெரும் துயரத்தையும், இழப்பையும் சந்தித்திருக்கிறது. விக்னேஷின் தியாகம் ஈடு இணையற்றது. ஆனாலும், இத்தகைய தியாகத்தால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஈழப் பிரச்சினைக்காக தம்பி முத்துக்குமாரில் தொடங்கி முருகதாசன் வரை 18 தமிழ் சொந்தங்கள் உயிர்த் தியாகம் செய்தனர். பேரறிவாளன் உள்ளிட்ட 3 தமிழர்களின் உயிர்களைக் காக்க செங்கொடி உயிர்த்தியாகம் செய்தார். இப்போது காவிரிக்காக விக்னேஷ் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துள்ளார். விலை மதிப்பற்ற தமிழர்களின் உயிர்களை தீக்கிரையாக்கும் செயல்கள் இனியும் தொடரக்கூடாது.
காவிரியில் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவது உண்மை. அதை சட்டப் போராட்டத்தாலும், அறப்போராட்டத்தாலும், அரசியல் அழுத்தம் கொடுப்பதாலும் தான் முறியடிக்க வேண்டும். மாறாக உயிர்த்தியாகம் செய்வதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது. இதை உணர்ந்து தீக்குளிப்பது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது. விக்னேசின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.