ஸ்டாலினை பொதுக்குழுவில் செயல்தலைவராக அறிவிக்க அன்பழகன் தயக்கம்?
திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனே செயல் தலைவர் அறிவிப்பு வெளியிட வேண்டாம் என அன்பழகன் தரப்பில் த
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலினை செயல் தலைவராக அறிவிக்க அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் பொதுக்குழு ஜனவரி 4-ந் தேதி நடைபெறுகிறது. இப்பொதுக் குழுவில் திமுக பொருளாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி, துணைப் பொதுச்செயலராகவும் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது திமுக பொதுச்செயலரான அன்பழகன் இதற்கு தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுக்குழுவில் தலைவர் என்கிற அடிப்படையில் கருணாநிதிதான் செயல் தலைவர் என ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்; ஆனால் அவர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அப்படியான ஒரு அறிவிப்பை வெளியிடுவது சரியில்லை என்கிறதாம் அன்பழகன் தரப்பு. ஸ்டாலின் தரப்போ, பொதுச்செயலராக இருக்கும் நீங்கள் கூட அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்கிறதாம்.
இதனால் ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்படுவாரா? இல்லையா? என திமுக தொண்டர்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.