அப்துல் கலாம் நினைவிடம்.. கையெழுத்து இயக்க்தில் குதித்த கலாமின் 99 வயது அண்ணன்
சென்னை: மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு விரைவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் கலாமின் 99 வயது அண்ணன் ஏபிஜேஎம் மரைக்காயர்.
இது ஒரு ஆன்லைன் கையெழுத்து இயக்கமாகும். ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட கலாமுக்கு உடனடியாக நினைவிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த கையெவுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர் கலாமின் பேரன் ஷேக் சலீம் ஒன்இந்தியாவிடம் கூறுகையில், எங்களது தாத்தா மரைக்காயரின் விருப்பத்தின் பேரில் இந்த பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். இது ஆன்லைன் கையெழுத்து இயக்கமாகும் என்றார்.
பெரும் சோகத்தில் தாத்தா மரைக்காயர்
இதுகுறித்து சலீம் கூறுகையில், தாத்தா பெரும் கவலையில் உள்ளார். பேய்க்கரும்பில் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கும் நிலை அவரை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. எனவேதான் இந்த கையெழுத்து இயக்கத்தைத் தொடங்குமாறு குடும்பத்தினருக்கு அவர் உத்தரவிட்டார். அவர் சொன்னது போல தற்போது தொடங்கியுள்ளோம்.
அதிகாரிகள் வருகை
இதற்கிடையே, மத்தியப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று கலாம் அடக்க ஸ்தலத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சர்வேயும் செய்தனர். கூடுதல் நிலம் கேட்டு தமிழக அரசை அணுகியிருப்பதாகவும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். தற்போது 1.5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. இதுபோக கூடுதல் நிலம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் என்னுடன் பேசினார். அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார். மேலும் ஜனவரி முதல் வாரத்தில் கலாம் வீட்டுக்கு வருவதாகவும் அவர் உறுதியளித்தார் என்றார் சலீம்.
மோசமான நிலையில் அடக்க ஸ்தலம்
கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பராமரிப்பு இல்லை. மாடுகள் வந்து அசுத்தம் செய்கின்றன. நாய்களும் திரிகின்றன. இதுகுறித்து ஒன்இந்தியா ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
கையெழுத்து இயக்கம்
இந்த நிலையில்தான் தற்போது கலாம் குடும்பத்தினர் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் சேஞ்ச். ஓஆர்ஜி தளத்தில் ஒரு ஆன்லைன் மனுவைப் போட்டுள்ளனர். (https://www.change.org/p/build-a-memorial-at-kalam-s-burial-site-mvenkaiahnaidu), அதில் மரைக்காயர் தனது கவலையையும், நினைவிடம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.
மரைக்காயரின் கோரிக்கை
இதுகுறித்து அந்த மனுவில் மரைக்காயர் கூறுகையில், எனது தம்பி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மரணமடைந்து 5 மாதங்களாகி விட்டது. இன்று அவரது அடக்க ஸ்தலம் விலங்குகளின் கழிவுகளால் அசுத்தமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. நினைவிடம் அமைக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடக்கவில்லை.
எங்க போனார்கள் எல்லோரும்?
கலாம் மறைந்தபோது அத்தனை பேரும் வந்தனர். ஆட்சி, அதிகாரத்தில் இருப்போர் எல்லாம் வந்தனர். ஆனால் இன்று யாரையும் காணவில்லை. யாருமே இல்லாமல் தனித்து இருக்கிறது கலாம் அடக்க ஸ்தலம். ஒரு தற்காலிக கொட்டகையின் கீ்ழ் துயில் கொண்டிருக்கிறார் கலாம்.
நாட்டுக்காக உழைத்தவருக்கு இந்த நிலையா
நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கலாம். மத்திய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். உடனடியாக எனது தம்பிக்கு பொருத்தமான நினைவிடத்தை அது அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மரைக்காயர்.
வெங்கையா நாயுடுவுக்கு
இந்த ஆன்லைன் மனு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பெயருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனது மனுவின் இறுதியில் எனக்கு 99 வயதாகிறது. என்னால் அங்குமிங்கும் அலைந்து யாரையும் சந்திக்க முடியாது. எனக்கு அனைவரின் ஆதரவும் தேவை. இதுதான் ஒவ்வொரு இந்தியரின் விருப்பமும் கூட என்று முடித்துள்ளார் மரைக்காயர்.
குழப்பத்தைத் தவிர்க்க
இதற்கிடையே கலாம் நினைவிடம் தொடர்பாக பலரும் ஆன்லைனில் கோரிக்கைகளுடன் கிளம்பியிருப்பதால் குழப்பமே மேலோங்கி நிற்பதாகவும், கலாம் குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் யாரும் எதையும் செய்ய வேண்டாம் என்றும் சலீம் கூறியுள்ளார்.