இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் முற்றுகிறது- பிரதமரை சந்தித்து பன்னீர் புலம்பல்.. சொல்வது நமது எம்ஜிஆர்
பிரதமர் மோடியை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்ததே முதல்வர் எடப்பாடி பற்றி புகார் சொல்லத்தான் என்கிறது நமது எம்ஜிஆர் நாளேடு.
சென்னை: பிரதமர் நரேந்திரமோடியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓபிஎஸ்- உடன் டெல்லி சென்ற அமைச்சர் தங்கமணிக்குப் பிரதமரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர வைத்துள்ளது.
"எடப்பாடி பழனிசாமி தன்னை ஓரம்கட்டுவதை பிரதமரிடம் தெரிவித்தார் பன்னீர்செல்வம்' என செய்தி வெளியிட்டுள்ளது அதிமுகவின் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ். எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு, அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரின் செய்திகளில் காட்டமான விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
தொடக்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஏராளமான செய்திகளை வெளியிட்ட நமது எம்.ஜி.ஆர், கடந்த சில வாரங்களாக மாநில அரசை வறுத்தெடுப்பதை கொள்கையாக வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு முதற்கொண்டு மாநில அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல்?
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியது குறித்து நமது எம்.ஜி.ஆர் வெளியிட்டுள்ள செய்தியில், எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடந்துவரும் பனிப்போர் முற்றிய நிலையில் பிரதமரை சந்தித்துப் புகார் தெரிவிப்பதற்காக நேற்று திடீரென பிரதமரை 40 நிமிடங்கள் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழக அரசியலில் தனக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்தும் பிரதமரிடம் தெரிவித்தார்' எனக் குறிப்பிட்டு, ' ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்ற பிறகு கழகத்தின் பொதுச் செயலாளர் சின்னம்மா எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகத் தேர்வு செய்து பதவியில் அமர வைத்தார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வாக்களித்தார்.
|
இணைப்புக்கு நிபந்தனைகள்
இந்நிலையில், இணைப்பு முயற்சிக்காக சிலர் பேசியபோது, தனக்கு முதலமைச்சர் பதவியும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் கொடுத்தால்தான் இணைவேன் என அடம் பிடித்தார். பிறகு டெல்லியின் கட்டளைக்கு அடிபணிந்து தனது நிபந்தனைகளைத் தளர்த்திக் கொண்டு எடப்பாடியுடன் கைகோர்த்தார்' என விவரித்திருக்கிறது.
எடப்பாடி உத்தரவிட்டார்?
மேலும் நாட்கள் செல்லச் செல்ல பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் ஓரம்கட்டத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியில் ஓ. பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு வளர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டார். அதேபோன்று ஆட்சியிலும் பன்னீர்செல்வம் கை ஓங்கிவிடாமல் இருப்பதற்காக ஆங்காங்கே செக் வைத்து நிர்வாகத்தை நடத்திச் சென்றார். தனது கவனத்துக்கு வராமல், தான் உத்தரவு பிறப்பிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் பிறப்பிக்கும் எந்தவொரு உத்தரவையும் அமல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டது. அதனால், பன்னீர்செல்வம் நினைத்த எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை. அவரை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொருமிக் கொண்டிருந்த நிலையில், திடீரென டெல்லியில் பிரதமரை சந்திக்க முடிவு செய்தார்' என விமர்சித்துள்ளது. இந்தக் கட்டுரை அ.தி.மு.க தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஓபிஎஸ் விளக்கம்
ஆனால், இந்த சந்திப்பு குறித்துப் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம், மரியாதை நிமித்தமாகவே பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தேன். தமிழகத்தின் மின் தேவை குறித்து முதல்வர் அளித்த கடிதத்தை பிரதமரிடம் வழங்கினேன். தமிழக வளர்ச்சி குறித்த கோரிக்கை மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். இந்த சந்திப்பில் அரசியல் குறித்துப் பேசவில்லை. முதலமைச்சருக்கும் எனக்கும் மன வருத்தம் ஏற்படவில்லை. அ.தி.மு.க.வில் இனி பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் எங்கள் அணியினர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை' எனப் பேட்டியளித்தார். நமது எம்.ஜி.ஆர் செய்தியையும் பன்னீர்செல்வத்தின் விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பட்டிமன்றமே நடந்து வருகிறது.