தேர்தல் விதிமீறல் வழக்கு… டாக்டர் ராமதாஸ் பண்ருட்டி மாஜிஸ்ரேட் கோர்ட்டில் ஆஜர்
நெய்வேலி: 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஜராகியுள்ளார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது, பண்ருட்டியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து, அப்போது திமுக கூட்டணியில் இருந்த டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுபவீர பாண்டியன், நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பண்ருட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், சுப வீரபாண்டியன், நடிகர் நெப்போலியன், சபா ராஜேந்திரன் உள்ளிட்ட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ராமதாஸ் இன்று கோர்ட்டில் ஆஜரானார். முன்னதாக, ஒரு மாதத்திற்கு முன்னர் பண்ருட்டி மாஜிஸ்ரேட் கோர்ட்டில் ஆஜராகி குற்ற நகலைப் ராமதாஸ் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, கோர்ட்டில் இன்று ஆஜராக வந்த ராமதாஸ், இந்த வழக்கு ஒரு பொய் வழக்கும் என்று கூறினார். மேலும், கர்நாடக அரசு 10 நாட்களுக்குள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த வழக்கில், நடிகர் நெப்போலியன் மற்றும் எம்எல்ஏ சபா ராஜேந்திரன் ஆகியோரும் இன்று கோர்ட்டில் ஆஜரானார்கள்.
வழக்கின் விசாரணை இம்மாதம் 26ம் தேதிக்கு ஒத்து வைத்து பண்ருட்டி மாஜிஸ்ரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications