அதிமுகவின் மற்றொரு முகம் ஊழல் : கழகத்தின் கதை வெளியிட்ட டாக்டர் ராமதாஸ்
அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் உள்ளிட்டவை பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கழகத்தின் கதை புத்தகத்தை எழுதியதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இன்னொரு முகத்தைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே கழகத்தின் கதை என்ற புத்தகத்தை எழுதியுள்ளதாக வெளியீட்டு விழாவில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
'கழகத்தின் கதை' என்ற பெயரில் அ.தி.மு.க.வின் தொடக்க காலம் முதல் இன்று வரை உள்ள செயல்பாடுகள் பற்றி டாக்டர் ராமதாஸ் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.
டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் புத்தகத்தை வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு வெளியிட்டார். மாநில துணை தலைவர் திலகபாமா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
ராமதாஸ் பேச்சு
தமிழகத்தில் ஏன் பிறந்தோம் என மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு அ.தி.மு.க.வின் தொடக்க காலம் முதல் இன்று வரை தெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் தற்போதைய இளைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் உள்ளிட்டவை பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.
ஜெயலலிதா உடன் நட்பு
அதிமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடன் நட்புடனும், மரியாதையுடனும்தான் ஜெயலலிதா நடந்துகொண்டார். ஆனால், அவரை இயக்கிய சிலரின் தூண்டுதலால் அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்தார். வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஓராண்டுக்குள் திரும்பப் பெற்றதும் அதில் ஒன்று. ஜெயலலிதாவின் அந்த முடிவு தவறானது. இதனால், தேவையற்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தேன். இதுபோன்ற சில நிகழ்வுகள் குறித்தெல்லாம் இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியிருக்கிறேன்.
அரசியல் ஆதாயமில்லை
அ.தி.மு.க.வின் மற்றொரு முகத்தை பற்றி முகநூலில் தான் முதலில் எழுதினேன். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்தே அதனை ஒரு புத்தகமாக எழுதினேன் என்று ராமதாஸ் கூறினார். தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதினேன். மாறாக அரசியல் ஆதாயத்திற்காக இதனை செய்யவில்லை.
திமுகவின் மற்றொரு பக்கம்
இதேபோல் எதிர்காலத்தில் தி.மு.க.வின் மற்றொரு பக்கம் பற்றியும் நூல் எழுதுமாறு கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இலவசங்களை வாரி இறைத்து மக்களை சிந்திக்க விடாமல் செய்துள்ளன.
நிர்வாக திறமையில்லை
அமைச்சர்களே ஒருவரையொருவர் குறைகூறி சண்டையிட்டு கொள்வது வேதனையளிக்கிறது. மது, ஊழல், நிர்வாக திறமையின்மை ஆகியவை இந்த அரசின் தலையாய பிரச்சினையாக இருக்கிறது. முதல்வர்கள் மாறினாலும் எந்த மாற்றமும் இல்லை.
மாற்றம் வேண்டும்
முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்த போது, அவரது வங்கி கணக்கில் ரூ.100 தான் இருந்தது. ஆனால் தற்போது அமைச்சர்களே கோடிக்கணக்கில் ஊழல் செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே தற்போது மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகிறார்கள்.
ஊடகத்தோடு கூட்டணி
எந்த சூழலிலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் பாமக கூட்டணி வைக்காது என்று கூறிய ராமதாஸ், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் சக்தியாக பா.ம.க. உருவெடுக்கும் என்றார். ஊடகத்தோடு மட்டும் தான் எங்கள் கூட்டணி. ஊடகமும் - அரசியலும் என்கிற பெயரில் சென்னையில் பசுமை தாயகம் சார்பில் நூல் வெளியிடப்பட உள்ளது என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.