சேலத்தில் திராவிட இயக்க தமிழறிஞர் கோ வேள் உடல் தானம்!
சேலம்: திராவிட இயக்க உணர்வாளாரும் பகுத்தறிவாதியுமான 80 வயது தமிழறிஞர் கோ. வேள் நம்பியின் உடல் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது
தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய வேள் நம்பி, தமிழாசிரியர் கழகத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
1999 ம் ஆண்டு தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி இவர் உட்பட 102 தமிழாசிரியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்
தமிழறிஞர் வேள் நம்பிக்கு பெற்றோர் இட்ட பெயர் விஜயராஜன் என்பதாகும். 1983 ஆம் ஆண்டு ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது சிங்களவர்கள் மீது கடும் வெறுப்பு கொண்டார். விஜயன் என்ற சிங்கள மன்னன்தான் இலங்கையின் முதல் அரசனாக குறிக்கப்படும் வரலாறு அறிந்ததும் அந்த பெயரைத் துறந்து வேள் நம்பி என்று மாற்றிக் கொண்டு அரசிதழிலும் பதிவு செய்து விட்டார்.
1956 ல் குமுதம் இதழ் திராவிட நாடு வேண்டும் என்ற தலைப்பில் நடத்திய போட்டியில் பரிசு பெற்றுள்ளார். அறிஞர் அண்ணாவின் உரைகளை ‘தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்' என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டுள்ளார். திராவிட இயக்க வரலாற்றை சொல்லும் ‘பயணம்' என்ற நூலை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று மூன்று பிரிவுகளாக எழுதியுள்ளார். தினத்தந்தி சி.பா. ஆதித்தனார் விருது, அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் அருவினையாளர் விருதுகள் பெற்றுள்ளார்.
நவம்பர் 27ம் தேதி 80 வது பிறந்த நாளைக் கொண்டாடும் எண்ணத்தில் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருந்த வேளையில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார். அவரது விருப்பப்படியே அவர் உடல் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட உள்ளது. மேலும் அவருடைய அறிவுரைப்படி கருப்புச் சட்டை அணிவித்து, எந்த வித சடங்குகளும் இல்லாமல் இறுதி நிகழ்வுகள் நடைபெறுகின்றன.