தமிழகத்தின் பல அணைகள் முற்றிலும் வறண்டன.. மேட்டூரில் மளமளவென சரிகிறது நீர்மட்டம்
மதுரை: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யத் தொடங்காத காரணத்தால் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 27 அணைகள் வறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பல கண்மாய்கள் நீரின்றி வறண்டுள்ளன. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும். நடப்பாண்டு பருவமழை ஜூன் 8ஆம் தேதி கேரளாவில் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும் தமிழகத்தில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. கேரளா, கர்நாடகாவிலும் மழை பெய்யாமல் ஏமாற்றி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் குஜராத் கடற்கரையை தாக்கிய அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல் காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள அணைகளிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டை விட பருவமழை பலவீனமடைந்துள்ளதாலும், ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சீரான மழைப்பொழிவு இல்லாததாலும் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. ஜூலை முதல் வாரத்திற்குள் கர்நாடகாவில் பருவமழை கணிசமான பகுதிகளில் பெய்யவில்லை என்றால், கர்நாடகா இந்த ஆண்டு வறட்சியை சந்திக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவின் முக்கிய நீர் ஆதாரமான கிருஷ்ணராஜசாகர் அணையில் தற்போது அதன் அதிகபட்ச கொள்ளவான 124.8 அடிக்குப் பதிலாக 77.6 அடி அளவு மட்டுமே நீர்மட்டம் உள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றி விட்டது. மழை இல்லாத காரணத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து விட்டது. அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. தடுப்பணைகளில் தண்ணீர் வற்றத் தொடங்கியுள்ளதால் விவசாய பணிகள் கேள்விக்குறியாகியுள்ளது. பெரும்பாலான குளங்கள் வறண்டு விட்டன. மதுரை மாவட்டத்திலும் குளங்கள் வற்றத் தொடங்கியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் பருவமழை தொடங்காத காரணத்தால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் மிகக் குறைவாக உள்ளதாகவும், இதனால் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், தற்பொழுது குடி நீருக்காக மட்டுமே அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த வாரங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது வெறும் பாறை மட்டுமே காட்சிப்பொருளாக உள்ளது.
இதனிடயே தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால், காவிரியில் நீர்வரத்து மிகவும் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாத காரணத்தால் அங்குள்ள ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகள், தண்ணீரின்றி வறண்டு பாறைகள் மட்டுமே தென்படுகிறது.
அதே போல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதி, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 727 கன அடியாகவும், நீர்மட்டம் 103.41 அடியாகவும், நீர் இருப்பு 69.33 டி.எம்.சி.யாகவும் இருந்தது. ஆனால், டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தினமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தும் 121 அடியாக மட்டுமே உள்ளது. நீர் வரத்தை காட்டிலும், நீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியது.
மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 121 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 13 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 92.40 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 91.43 அடியானது. இன்றைய தினம் 90 அடியாக மேட்டூர் அணை நீர் மட்டம் சரிந்துள்ளது. கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் அங்கிருந்தும் தற்போதைக்கு தண்ணீரை எதிர்பார்க்க முடியாது. வருண பகவான் மனது வைத்து தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
குறுவை சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சரியான நேரத்தில் மழை பெய்தால் மட்டுமே நடப்பாண்டு நெல் சாகுபடியில் குறிப்பிட்ட இலக்கை எட்ட முடியும் என்று விவசாயிகள் கவலையடைத்தொடங்கியுள்ளனர். வறட்சி என்ற வார்த்தையை சொல்ல முடியாத அளவிற்கு சில ஆண்டுகாலமாக பருவமழை சரியான அளவிற்கு பெய்தது அணைகள் நிரம்பி வழிந்தன. நடப்பாண்டு பருவமழை ஏமாற்றிய காரணத்தால் வறட்சி நிலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் வட இந்திய மாநிலங்களில் பருவமழை தீவிரத்தால் அங்குள்ள ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகின்றன. பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் மழை விரைவில் தீவிரமடைய வேண்டும் என்று வருண பகவானை விவசாயிகள் வேண்டத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications