குறுக்குதுறை முருகன் கோயிலில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... அகற்ற முடியாமல் திணறும் அதிகாரிகள்!
ஓகி புயலால் நெல்லை மாவட்டம் குறுக்குத்துறை முருகன் கோவிலில் அடித்து வரப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
திருநெல்வேலி : ஒகி புயலால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் குப்பைகள் கோயிலில் அடைத்து கிடப்பதால் அதை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி தாமிரபரணியில் ஆற்றுக்கு உள்பகுதியில் குறுக்குதுறை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. வெள்ளகாலத்தில் தண்ணீர் கோயிலை மூழ்கடித்து விடும் என்பதால் உற்சவர் மட்டும் அருகில் உள்ள மேல கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இரு ஆண்டுகளுக்கு பின் கடந்த ஒகி புயலால் தாமிரபரணியில் பெரு வெள்ளம் ஏற்பட்டது.
அப்போது குறுக்குதுறை முருகன் கோயில் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது. கோயில் மூழ்குவதற்கு முன்பே உற்சவர் சிலை, முக்கிய பொருட்களை அருகில் உள்ள மேல கோயிலுக்கு எடுத்து சென்று விட்டதால் அவைகள் வெள்ளத்தில் போகாமல் தப்பியது. இதனிடையே வெள்ளம் வடிந்த நிலையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கொடிகள், செடிகள், மரக்கிளைகள், மண் குவியல்கள், குப்பைகள் மலை போல் கோயில் சுற்றுபுறங்களிலும், கோயில் உள் பகுதியிலும் தேங்கி கிடப்பதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் மலை போல் குப்பைகள் இருப்பதால் ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை அள்ளி முடிக்க ஒரு வார காலம் ஆகும் என கூறப்படுவதால் பொது மக்களும், பக்தர்களும் வேதனையில் உள்ளனர்.