வறட்சியால இலவச ஆடு வழங்கும் திட்டம் நிறுத்தி வைப்பு-அப்ப உச்சநீதிமன்றத்தில் சொன்னது பச்சைப் பொய்யா?
உச்சநீதிமன்றத்தில் வறட்சியே இல்லை என்று சொன்ன தமிழக அரசுதான் தற்போது வறட்சியை காரணம் காட்டி இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உச்சநீதிமன்றத்தில் வறட்சியே இல்லை என பச்சைப் பொய்யை அண்மையில் கூறிய தமிழக அரசுதான் இப்போது வறட்சி காரணமாக இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பது பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் 140 ஆண்டுகாலம் இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சியின் துயரம் தாங்க முடியாமல் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயினர்.
வறட்சி மாநிலம்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தது. ஆனால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு போதுமான வறட்சி நிவாரண நிதியை வழங்கவில்லை.
கடன்கள் தள்ளுபடி
இதனிடையே விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குப் போனது.
வறட்சியே இல்லையாம்
உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் வறட்சியே இல்லை... ஆங்காங்கே சில இடங்களில்தான் வறட்சி இருக்கிறது என வடிகட்டின பொய்யைச் சொன்னது. இதனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்தானது.
வறட்சியால் நிறுத்தி வைப்பாம்
இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதையொட்டி வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், டிசம்பர் மாதம் முதல் 'வறட்சி' காரணமாக விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்காக இந்த அரசு
உச்சநீதிமன்றத்துக்குப் போய் கூசாமல் வறட்சி இல்லை என்று சொல்லி விவசாயிகளின் வயிற்றில் அடித்தது எடப்பாடி அரசு. இப்போது அதே அரசு விவசாயிகளின் வாழ்வாதாரமான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை வறட்சி காரணமாக நிறுத்திவிட்டதாக கூறி மீண்டும் முதுகில் குத்தியிருக்கிறது. சொந்த மக்கள் நலனைப் பார்க்காத இந்த அரசு யாருக்காக செயல்படுகிறது? இந்த அரசு தேவைதானா? என்பதுதான் விவசாயிகளின் கேள்வி.