வெள்ள நிவாரணத்தை கொள்ளையடிக்காமல் வழங்க வேண்டும் - துரை முருகன்
வேலூர்: ஆளும் கட்சியினர் வெள்ள நிவாரணத்தில் கொள்ளையடிக்காமல் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து 23 ஆம் தேதி காலை முதல் மாலை வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய துரைமுருகன், "திமுக ஆட்சியின்போது கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேலூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை கொண்டு வரப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியது.
அதோடு, மின் உற்பத்தி நிலையமும் சர்க்கரை ஆலையில் கடந்த ஆட்சியில் அமைக்க நிதிஒதுக்கி அந்த பணிகள் முடிந்தன. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபின் திமுக நிறைவேற்றிய திட்டம் என்பதாலே அதை செயல்படுத்தாமல் முடக்கிவைத்துள்ளனர்.
அதோடு, ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளன ஆலை நிர்வாகம் இது கண்டிக்கதக்கது. அதோடு கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகை கோடிக்கணக்கில் தராமல் வைத்துள்ளது. இதனை உடனே வழங்க வேண்டும்.
ஆலை நிர்வாகத்தில் உள்ள அதிமுகவினர் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளனர். அடுத்து வரும் திமுக ஆட்சிதனி கமிட்டி அமைத்து ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பல்லாயிரம் கோடி நிதியுதவி வேண்டும் என மத்தியரசிடம் நிதி கேட்கிறார் ஜெயலலிதா. முதலில் இருக்கும் நிதியில் கொள்ளையடிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் முறையாக வழங்க வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.