கருணாநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக..சும்மா இருக்கோம்.. இல்லாட்டி.. துரைமுருகன் அதிரடி
கருணாநிதி கூறிய வார்த்தைக்காக அமைதியாக இருக்கிறோம் இல்லை என்றால் எப்போதோ ஆட்சியை கவிழ்த்திருப்போம் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு ஏதாவது நடந்தால் அந்த கட்சி உடையும், அப்படி உடையும் போது ஆட்களை இழுக்கக் கூடாது என்று கருணாநிதி முன்பே கூறியிருக்கிறார். அதற்காக அமைதியாக இருக்கிறோம் இல்லை என்றால் எப்போதோ ஆட்சியை கவிழ்த்திருப்போம் என்று திமுகவின் துணை பொருளாளர் துரை முருகன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு, இந்தி திணிப்புக்கு எதிராக சில தினங்களுக்கு முன்பு சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துரைமுருகன், நவரசத்தையும் காட்டி பேசியுள்ளார்.
திணிக்க வேண்டாம்
இந்தியை படிக்க வேண்டாம்னு சொல்லலை , திணிக்க வேண்டாம்னுதான் சொல்றோம். இந்தி படிச்சா வடநாட்ல வேலை செய்யலாம்னு சொல்றாங்க. ஆனா வட நாட்டுக்காரங்க இங்க வந்துதானே வேலை செய்யாறங்க.
ஜெயலலிதா ஆசிர்வாதம்
ஓ. பன்னீர் செல்வம் போலவே நடித்து காட்டிய துரைமுருகன், ஜெயலலிதாவும், பன்னீர் செல்வமும் பேசிக்கொள்வது போல மோனோ ஆக்டிங் செய்து காட்டி அப்ளாஸ் அள்ளினார்.
எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிழக்கு எது மேற்கே எதுன்னே தெரியல. பிரதமர் கிட்ட போய் குனிஞ்சி நிமிரவே நேரம் சரியா இருக்கு என்று கூறி அதே போல நடித்தும் காட்டினார்.
கருணாநிதி சொன்னார்
ஜெயலலிதாவிற்கு ஏதாவது ஆயிட்டா அந்த கட்சி உடையும், அந்த பக்கமிருக்கு ஆட்களை இழுக்கக் கூடாது என்று கருணாநிதி அப்போதே கூறினார். அதற்காகத்தான் அமைதியாக இருக்கோம். இல்லைன்னா... சீட்டு கட்ட கவுக்கிற மாதிரி எப்பவோ கவுத்து போட்டிருப்போம் என்றார்.
கிழிச்சிடறேன் கிழிச்சி
சட்டசபையை மட்டும் கூட்டட்டும், ஓ,பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவர் மீதும் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர்றேன் என்றார். சும்மாவே வெயில் அனலாய் தகிக்க, துரைமுருகனும் தன் பங்குக்கு அனலை கக்கிவிட்டே அமர்ந்திருக்கிறார்.