ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ, ஆர்ஐ, தாசில்தார் அதிரடி கைது!
சென்னையில் நிலத்தை மறுவரையறை செய்ய லஞ்சம் கேட்ட தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : சரியான ஆவணங்கள் இருந்தும் நில பயன்பாட்டு மறுவரையறை செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட ஆர்டிஓ, ஆர்ஐ, தாசில்தார் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்காக மறுவரையறை செய்ய ஆர்டிஓ அலுவலகத்தை அணுகியுள்ளார். நிலத்திற்கான சரியான பத்திரங்கள் இருந்த போது ஆர்டிஓ, வருவாய் ஆய்வாளர், தாசில்தார் உள்பட 3 பேர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அனைத்து பத்திரங்களும் சரியாக இருந்தும் முதல்நிலை அதிகாரி முதல் தாசில்தார் வரை லஞ்சம் கேட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார் அந்த நபர். இதனையடுத்து இது குறித்து லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.
இதன் பேரில் லஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் ரூ.1 லட்சத்தை சம்பந்தப்பட்டவர் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்சஒழிப்புத் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
தாம்பரம் ஆர்டிஓ ரவிச்சந்திரன், ஆலந்தூர் வருவாய் ஆய்வாளர் முத்தழகன், ஆலந்தூர் தாசில்தார் தனசேகரன் உள்ளிட்டோரை கைது செய்து விடிய விடிய அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து லஞ்சப் புகாரில் சிக்கிய 3 அரசு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.