முதல்வருக்கு திமுக அடுத்த செக்.. ஊழல் பற்றி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.. ஹைகோர்ட்டில் புதிய மனு
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறவினர் பங்குதாரராக உள்ள நிறுவனத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்த வகையில் ரூ.4,800 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது, என்பது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு. இது தொடர்பாக, ஜூன் 13ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் ஆர்.எஸ்.பாரதி, புகார் மனு அளித்திருந்தார்.
ஆனால், விசாரணை துவங்கப்படவில்லை என்றும், உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆர்.எஸ்.பாரதி ஹைகோர்ட்டில் ஆகஸ்ட் 23ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடந்த 4ம் தேதி பதில் தாக்கல் செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடுகள் தொடர்பான புகார் அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஜூன் 22ம் தேதியே ஆரம்பகட்ட விசாரணை துவங்கிவிட்டதாகவும், அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
நாளை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், இன்று ஆர்எஸ்எஸ் பாரதி தரப்பில் பதில் மனுவுக்கு பதில் மனு என்ற அடிப்படையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் புதிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. "லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் வருகிறது. அவருக்கு எதிராக எப்படி விசாரணை நியாயமாக நடக்கும்? எனவே இந்த ஊழல்் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த புலனாய்வு குழு விசாரணையை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது.