மின் கட்டணத்துக்கு இன்று ஒருநாள் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் - மின்சார வாரியம்
இன்று ஒரு நாள் மட்டும் மின்சார கட்டணம் செலுத்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மின்சார கட்டணம் செலுத்த வசதியாக இன்று ஒருநாள் மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பழைய செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய மற்றும் மாநில அரசின் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய தொகை, கட்டணம், வரி மற்றும் அபராதம் ஆகியவற்றுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த செல்லாத பழைய நோட்டுகளை நீர், மின் வசதி ஆகிய சேவைகள் தொடர்பான கட்டணங்களுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வசதி 11-ந் தேதி நள்ளிரவு வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார வாரிய மின் கட்டணங்களை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செலுத்தலாம்.
இந்த வசதி 11-ந் தேதி நள்ளிரவு (இன்று) வரை மட்டுமே பொருந்தும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணம் செலுத்துவதற்கான காலநீட்டிப்பில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் 11-ந் தேதிக்கு பிறகு இந்த பழைய நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது. 12-ந் தேதி முதல் செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளை கொண்டு தான் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.