சசிக்கு எதிராக இன்னொரு ஓபிஎஸ்ஸாக விஸ்வரூபமெடுங்க.. எடப்பாடியை உசுப்பிவிடும் டெல்லி
மக்கள் செல்வாக்கு கிடைக்கு ஓபிஎஸ் போல சசிகலாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடியை உசுப்புகிறதாம் டெல்லி.
சென்னை: சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போல விஸ்வரூபமெடுத்தால் மட்டுமே மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும் என முதல்வர் எடப்பாடியை உசுப்பிவிடுகிறதாம் டெல்லி.
பெங்களூரு சிறையில் இருந்தபடியே கட்சிக்குள் நடக்கும் காட்சிகளை கவனித்து வருகிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. அன்னிய செலாவணி மோசடி வழக்கில், வீடியோ கான்பிரன்ஸிங்கில் அவர் ஆஜரானபோது, வழக்கமான உற்சாகம் அவரிடம் இல்லை. முன்பைவிட உடல்நலனில் தளர்ந்துவிட்டார் சசிகலா.
இருப்பினும், கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் என உறுதியாக நம்புகிறார் சசிகலா என்கின்றனர் அ.தி.மு.க வழக்கறிஞர்கள். இன்னொரு பக்கம் முதல்வராகவும் அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளராகவும் உற்சாகமாக வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடியின் நம்பிக்கை
இஃப்தார் நோன்பு திறப்பு விழாவிலும் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததிலும், தன்னுடைய வலிமையைக் காட்டினார் எடப்பாடி. அதேநேரத்தில் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை மீட்புக்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின்படி, தங்கள் கைக்கு சின்னம் வரும் எனவும் நம்புகிறார்.
ஓபிஎஸ் துரோகி
இதுகுறித்து சசிகலாவிடம் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் தம்பிதுரை. இந்த சந்திப்புக்குப் பிறகு, தம்மை சந்திக்க வந்தவர்களிடம் பேசிய சசிகலா, எவ்வளவோ துரோகங்களைப் பார்த்துவிட்டோம். ஓபிஎஸ் போல நமக்கு துரோகம் செய்ய இனி யாரும் வரப் போவதில்லை. தேர்தல் ஆணையத்தில் என்னை முன்னிறுத்தியும் நான் நியமித்த நிர்வாகிகளை முன்னிறுத்தியும்தான் அஃபிடவிட் தாக்கல் செய்திருக்கிறார்கள். என் மீது எடப்பாடி தரப்புக்கு அக்கறை இல்லாவிட்டால், இதுபோல் ஏன் செய்ய வேண்டும்?
எடப்பாடி மீது நம்பிக்கை
அதிகாரம் நம் கையில் இருப்பதை சிலர் விரும்பவில்லை. அதற்காகத்தான் அமைச்சர்களுக்கு சில அழுத்தங்கள் வருகிறது. இதை நான் உணர்ந்து வைத்திருக்கிறேன்.
கொங்கு நமது பக்கமே
சொத்துக் குவிப்பு வழக்கில், ரிவியூ மனுவுக்கு நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன். நம்முடைய நிலையை எடுத்துக் கூறி, நம் பக்கம் அனைத்தும் வருவதற்கு எடப்பாடியே துணை நிற்பார். கொங்கு மண்டலம் எப்போதும் நம்மைக் கைவிட்டதில்லை.
பொதுச்செயலர் நானே
நான் சிறையில் இருந்து வரும்போது, என் கையில் பொதுச் செயலாளர் பதவியை, எடப்பாடி கொடுப்பார் என உற்சாகமாகப் பேசி வருகிறார் சசிகலா என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ஆனால், எடப்பாடிக்கு ஆலோசனை கூறும் பா.ஜ.க நிர்வாகிகளோ, அந்தக் குடும்பத்தை எதிர்த்தால் மட்டுமே வரக் கூடிய தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.
உசுப்பேற்றும் டெல்லி
இதை உணராமல் இருப்பதால்தான், உங்கள் மீது மக்களின் நம்பிக்கை நிழல்கள் படியவில்லை. ஓபிஎஸ் போல அந்தக் குடும்பத்தை எதிர்த்துப் பாருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் செல்வாக்கு கிடைக்கும். ஜெயலலிதா அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். அவரைப் போலவே அதிரடியாக சில நடவடிக்கைகளில் இறங்குங்கள். உங்களைத் தேடி அனைத்தும் வரும்.
எடப்பாடி தீவிர ஆலோசனை
மிகச் சொற்பமாக உள்ள சசிகலா சமூகத்துக்கு 5 அமைச்சர்கள் இருக்கிறார்கள். மற்ற சமூகங்களை அவர்கள் ஒதுக்கி வைத்திருந்தார்கள். நீங்கள் அனைவரையும் அரவணைத்துச் சென்றால், மாநிலம் முழுவதும் நல்ல பெயர் கிடைக்கும். ஒரு வலுவான தலைவராக நீங்கள் உருவெடுப்பீர்கள்' எனக் கூறியுள்ளனர். இந்த யோசனையை கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் கூறி ஆலோசித்து வருகிறார் எடப்பாடி. இதன் எதிரொலியாகத்தான், அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் பேசும்போது, எந்த இடத்திலும் சசிகலா பெயரை அவர் உச்சரிக்கவில்லை' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.