என்னங்க இது.. திமுக கூட்டணியை விட கம்மி எம்.எல்.ஏக்கள்தான் எடப்பாடியிடம் இருக்காங்களாமே!!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு கிட்டத்தட்ட மைனாரிட்டி அரசாகி விட்டது. அதாவது திமுக கூட்டணியை விட குறைந்த அளவிலான எம்.எல்.ஏக்கள்தான் தற்போது எடப்பாடி பக்கம் உள்ளனராம்.
ஜெயலலிதா என்றைக்கு இறந்தாரோ அன்றைக்கே தமிழக அரசு சிதையத் தொடங்கி விட்டது. பதவியையும், பணத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் மட்டுமே இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
3 அணிகளாக அதிமுக பிளவுபட்டு நிற்கிறது. மூன்று பேருமே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவில்லை. மக்களை மறந்து விட்டு தத்தமது குறிக்கோள், இலக்குகளை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஓபிஎஸ்
முதலில் ஓ.பி.எஸ் அதிமுகவை விட்டு வெளியே வந்தார். அவர் பின்னால் 11 எம்.எல்.ஏக்கள் அணிவகுத்தனர். இவரது வருகையால் சசிகலா முதல்வராக முடியாமல் போனது. கடைசியில் சசிகலா ஜெயிலுக்குப் போய் விட்டார்.
எடப்பாடி
எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர். ஆனால் அவரும் தற்போது தினகரன் - சசிகலாவுக்கு எதிராக திரும்பி நிற்கிறார். பகிரங்கமாக அவர் எதுவும் பேசுவதில்லை என்றாலும் கொங்கு லாபிக்கு அவரதான் தலைவர் என்கிறார்கள்.
தினகரன்
தினகரன் தற்போது புதிதாக முளைத்த தலைவராக இருக்கிறார். இவர் வசம் 29 எம்.ஏல்.ஏக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் இவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.
திமுகவை விட குறைவு
தற்போதைய நிலையில் எடப்பாடி தரப்பில் வெறும் 93 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது. இது திமுக கூட்டணியை விட குறைவாகும். திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்யப் போறாங்க
இந்த பொம்மலாட்டம், குஸ்தி விளையாட்டு எத்தனை நாட்களுக்குத் தொடரப் போகிறது என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை காலம் சட்டமும் வேடிக்கை பார்க்கப் போகிறது என்றும் தெரியவில்லை.