அசராத எடப்பாடி.. ஆட்டம் காணும் தினகரன் தரப்பு.. கெஞ்சலாக மாறிய, ஆட்சி கலைப்பு மிரட்டல்!
தினகரன் தரப்பில் உள்ள எம்எல்ஏக்களை எப்படியாயினும் தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை காரணமாக தினகரனின் உருட்டல் மிரட்டல்களுக்கு அசராமல் உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்களும் எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடுவர் என்ற தைரியம் காரணமாக
ஆட்சி கலைப்பு குறித்து தினகரன் என்னதான் மிரட்டினாலும் மிரளாமல் இருந்து வலம் வருகிறார் முதல்வர் எடப்பாடியார்.
அதிமுக இணைப்புக்கு பிறகு, சசிகலாவை நீக்குவது என்ற பேச்சால் கொந்தளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுகிறோம் என்று கடிதம் அளித்தனர். அதில் ஜக்கையன் தப்பி எடப்பாடி தரப்பில் வந்துவிட்டதால் தினகரன் பக்கம் 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
அதிமுகவில் நாளுக்கு நாள் கோஷ்டி பூசல் வலுவடைந்து வருகிறது. அதுவும் எடப்பாடியும், தினகரனும் தற்போது நேரடியாக பரஸ்பரம் விமர்சனங்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

பொதுக் குழு கூட்டத்தை
பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க வெற்றிவேல் எம்எல்ஏ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிபதியோ முதல்வர் கூட்டும் பொது கூட்டத்தை தடுக்க முடியாது. வேண்டுமானால் நீங்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்துவிடுங்கள் அல்லது அங்கு போய் உணவு மட்டும் அருந்தி விட்டு வாருங்கள் என்று கூறியிருந்தார்.

சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானம்
திட்டமிட்டபடி கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது எரியும் நெருப்பில் நெய் ஊற்றியது போல் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது.

விமர்சனங்கள் அதிகம்
பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் மதுரையில் தினகரன் நிருபர்களிடம் கூறியபோது இந்த ஆட்சியை கலைப்பதற்கான செயலில் இறங்கியுள்ளோம் என்றார். அதே தினகரன் நேற்று அளித்த பேட்டியில் ஒரு வாரத்தில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.

நிலைமை மோசம்
ஆனால் இன்று குடகில் நிருபர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன், எடப்பாடி தானாக தனது பதவியை விட்டு போக வேண்டும் என்று கூறியுள்ளார். இத்தகைய முரண்பாடுகளை பார்க்கும் போது தினகரன் தரப்பினரின் நிலைமை கெஞ்சும் அளவுக்கு மோசமாகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை வெளியுலக தொடர்பின்றி ரிசார்ட்டின் உள்ளேயே வைத்திருப்பதை பார்க்கும்போது, அவர்கள் எடப்பாடி தரப்புக்கு வர தயாராக இருப்பதை போன்ற தோற்றம்தான் நிலவுகிறது.

அசராத முதல்வர்
எனவேதான் எடப்பாடி பழனிச்சாமி, எப்படியும் ஜக்கையனை போல தினகரனிடம் உள்ள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். ஆட்சி கலைவதை அதிருப்தி எம்எல்ஏக்களும் விரும்பமாட்டார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். இதனால் அவர் தினகரனின் மிரட்டல் உருட்டல்களுக்கு பயப்படாமல் அசராமல் ஆவது ஆகட்டும் என்று இருந்து வருகிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 20ம் தேதிவரை ஹைகோர்ட் தடை விதித்துள்ளதும் ஒரு வகையில் எடப்பாடிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

சசிகலாவுடன் சந்திப்பு
தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரும் வருகிற 20-ஆம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கவுள்ளனர். இதனால் அன்றைய தினம் ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் தேர்தல் ஆணையமும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை இந்த மாத இறுதியில் தெரிவித்து விடும் என்ற தகவலும் கிடைத்துள்ளதால் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள சசிகலாவும், தினகரனும் எத்தகைய முடிவுகளை எடுப்பர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications