போராடுவது தனிப்பட்ட விருப்பமாம்.. விவசாயிகளை கொச்சைப்படுத்திய முதல்வர்
கோவை
கோவை: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் எனக்கூறி அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கோவையில் இன்று முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில் இவ்வாறரு அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அதிமுக ஒரே அணிதான் என்றெல்லாம் கூறிய முதல்வரிடம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ஷாக் பதில்
நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் அளித்த பதில் ஷாக் ரகம். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், என்று முதல்வர் பதிலளித்தார். இதன் மூலம், அவர்கள் கோரிக்கையை பரிசீலிக்க கூட தமிழக அரசு தயாராக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஊதிய உயர்வு
தமிழக அரசு எம்எல்ஏக்களுக்கான ஊதியத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. இதை விமர்சனம் செய்தும், தங்களை கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கத்திலும், டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் போராடும் விவசாயிகள் தலையில் செருப்பால் அடித்துக்கொண்டனர். இன்று துடைப்பத்தால் அடித்துக்கொண்டனர்.
அமைதி போராட்டம்
யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல், தங்களையே வருத்திக்கொண்டும், அவமானத்திற்கு உள்ளாக்கியும் போராடும் உழவர்களுக்கு மாநில முதல்வர் இப்படி ஒரு பதிலை பரிசாக கொடுத்து அதிர்ச்சியளித்துள்ளார்.
ஒடுக்குமுறை
சமீபகாலமாக தமிழக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில்தான் போராட்டங்களை அடக்கி வருகிறது. திருமுருகன் காந்தி, மாணவி வளர்மதி ஆகியோர் மீதான கைது நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறை சட்டங்கள் இதற்கு சான்று. இப்போது விவசாயிகளையும் அதேபோல கண்டுகொள்ளாமல் விட மாநில அரசு முடிவு செய்துள்ளது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.