இலங்கை சிறையில் உள்ள 11 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி 'லெட்டர்'
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களின் 135 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதையும் அவர்களின் படகுகளை பறித்து செல்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. பிடித்து செல்லும் மீனவர்களை அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்து வருகிறது.
அண்மையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இலங்கை சிறையில் உள்ள 11 தமிழர்கள் மற்றும் 135 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள் விடுவித்த போதிலும், படகுகள் விடுவிக்கப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகள், பழுதடைந்துள்ளது. மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.