ஓ.பன்னீர்செல்வத்தை நள்ளிரவில் சந்தித்த அமைச்சர்கள்.. அதிமுகவில் பரபரப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி ஆகிய எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்தவர்கள் நள்ளிரவில் சந்தித்து ஆலோசனை நடத்திய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் சுமார் 37 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இந்த நிலையில் வரும் 5ம் தேதி அவர் அதிமுக தலைமை அலுவலகம் வர உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு, ஆட்சியை காப்பாற்றியாக வேண்டிய அச்சம் எட்டிப் பார்க்கிறது.

எடப்பாடி தரப்பு அவசரம்
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து கொண்டு டிடிவி தினகரனை ஒதுக்கலாம் என்பது எடப்பாடி தரப்பு திட்டமாக உள்ளது. இதுவரை ஓ.பி.எஸ் தரப்புதான் இதில் வேகம் காட்டி வந்தது. எடப்பாடி தரப்பு நமக்கென்ன என்ற வகையில் மெத்தனம் காட்டியது. இப்போது எடப்பாடி தரப்புக்கு அவசர தேவை உருவாகியுள்ளது.

அமைச்சர்கள் சந்திப்பு
இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ்சுடன் நேற்று நள்ளிரவில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர். வைத்திலிங்கம் எம்.பியும் சந்திப்பின்போது உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை
இரு அணிகளையும் விரைந்து இணைக்க பேச்சுவார்த்தையில் அவசரம் காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியாவது சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிமுகவில் இருக்க கூடாது என்பதை உறுதி செய்வதில் இரு அணிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.

கோரிக்கைகள்
இதனால் அதிமுகவில் முத்தரப்பு மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்சுக்கு கட்சி பொதுச்செயலாளர் பதவியும், அவரை நம்பி அமைச்சர் பதவியை விட்டு வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் அமைச்சர் பதவியும் வழங்கினால் இரு அணிகளுமே இணைந்துவிடும் வாய்ப்புள்ளது. எப்படியும், வரும் 5ம் தேதிக்குள் அதிமுகவில் கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications