சந்திரபாபு நாயுடுவின் கையில் ஊசலாடும் தமிழக அரசு- அஞ்சி நடுங்கும் எடப்பாடி!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கையில் தமிழக அரசு ஊசலாடிக் கொண்டிருப்பதாக கோட்டை அஞ்சுகிறது.
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஓவர் சவுண்டால் இப்போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் தமிழக அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாகிவிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சி நடுங்கி போயுள்ளார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனத்தை கலக்கின்றன; தனியார் நிறுவனங்களின் பால் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அத்துடன் தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை எனில் தூக்கில் தொங்குவேன் எனவும் ஆவேசமாக கூறினார் ராஜேந்திர பாலாஜி.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. ஆவின் நிறுவனத்திலும் பாலில் கலப்படம் இருக்கிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

திடீர் அமைதி
இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாக அமைதி காத்து வருகிறார். இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தொடர்ச்சியான பேட்டிகளை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை அழைத்து பேசினார்.

டோஸ் விட்ட எடப்பாடி
அப்போது, நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி 'அல்ல' என்பதை முதலில் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.. ஒவ்வொரு நாளும் ஆட்சியை நகர்த்துவதே பெரும்பாடாக இருக்கிறது. நீங்கள் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டிருக்கிறீர்கள்.

சந்திரபாபு நாயுடு நினைத்தால்..
ஹெரிட்டேஜ் பால் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்று தெரியும்தானே? சந்திரபாபு நாயுடு நினைத்தால் 10 எம்.எல்.ஏக்களை தம் பக்கம் வளைக்க முடியும். அப்புறம் ஆட்சி கவிழ்ந்துவிடும்... இந்த அமைச்சர் பதவி உங்களுக்கு இருக்குமா? யோசித்து பேசுங்க எதையுமே என ஏகத்துக்கும் டோஸ் விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆதங்கத்தில் கோட்டை
இதன்பிறகுதான் ராஜேந்திர பாலாஜி சற்றே அமைதி காத்து வருகிறாராம். தமிழக அரசின் எதிர்காலம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கையில் ஊசலாடுகிறதே என ஆதங்கப்படுகிறது கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications